சூயஸ் கால்வாயில் கடந்த மாதம் கப்பல் ஒன்று சிக்கிக்கொண்டு மற்ற கப்பல்கள் செல்வதற்கான பாதையை மறைத்ததையடுத்து தடைப்பட்ட கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ளதால், இங்கு வரும் கப்பல்களை வரவேற்க ஆயத்தப் பணிகளை சிங்கப்பூர் துறைமுகம் மேற்கொண்டு வருகிறது.
அதிகரிக்கும் கப்பல் போக்கு
வரத்தை எதிர்கொள்ள கூடுதலான ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டிருப்பதாகவும் கப்பல் நிறுத்தப்படும் இடங்களின் இருப்பு குறித்து கப்பல் போக்குவரத்து நிறுவனங்
களுக்கு விரைவில் தெரிவிக்கப்படும் எனவும் சிங்கப்பூர் கடற்றுறை மற்றும் துறைமுக ஆணையத்தின் தலைமை நிர்வாகி குவா லே ஹூன் குறிப்பிட்டார்.
கப்பல்கள் சிங்கப்பூருக்கு வந்ததும் அவற்றைக் கையாளத் தேவையான கப்பல் நிறுத்துமிடங்கள், உபகரணங்கள், மனிதவளம் போன்றவற்றின் தொடர்பில் இயன்றவரை சிறப்பாகச் செயல்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஆசியா ஆகிய கண்டங்களை சூயஸ் கால்வாய் வழியாக இணைக்கும் மையமாக இருக்கிறது சிங்கப்பூர்.
வரும் 19 முதல் 23ஆம் தேதி வரை சிங்கப்பூர் கடல்துறை வாரம் அனுசரிக்கப்பட இருப்பதை அடுத்து, கொரோனா தொற்றுச் சூழலுக்குப் பிறகான தொழில்
துறைப் பிரச்சினைகள் குறித்து முக்கியமான தலைவர்கள் உரையாற்றுவர் என்று திருவாட்டி குவா குறிப்பிட்டார்.
அனைத்துலக கடல்துறை அமைப்பின் பொதுச்செயலாளர் கிட்டாக் லிம், உலக வங்கியின் பருவநிலை மாற்றத்துக்கான அனைத்துலக இயக்குநர் பெர்னிஸ் வான் புரோங்க்ஹார்ஸ்ட், கார்கில் ஓஷன் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தின் தலைவர் ஜான் டைலெமான் ஆகியோர் நிகழ்ச்சிகளில் உரையாற்றுவர். 6,000க்கும் அதிகமானோர் நிகழ்ச்சிகளில் பங்கேற்பர்.
கொரோனா தொற்றுக் காலத்தில் கடல்துறை ஊழியர்களில் 30 விழுக்காட்டினர் நாட்டிலிருந்து வெளியேறிய நிலையில், இங்கிருக்கும் உள்ளூர், வெளிநாட்டு ஊழியர்களைக் கொண்டு நிறுவனங்கள் செயல்பாடுகளை முடுக்கிவிட்டுள்ளன. ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய தேவை நிலவுவதாகக் கூறப்பட்டது.
கொரோனா தொற்றுப் பரவல் தடுப்பு, தடுப்பூசி போடுவது தொடர்பான செலவுகள் உட்பட நடை
முறைச் செலவுகள் அதிகரித்திருப்பது மற்றொரு பிரச்சினை. இத்துறையின் முன்கள ஊழியர்களில் 99 விழுக்காட்டினருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

