சிங்கப்பூரில் இடம்பெறவுள்ள நான்கு புதிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றான 'ஐஸ்கிரீம் அருங்காட்சி யகம்' வரும் ஆகஸ்ட் மாதத்
திலிருந்து செயல்படத் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெம்ப்சியில் அமையவுள்ள இந்த புதிய சுற்றுலாத்தலம் அமெரிக்காவுக்கு வெளியே அமைக்கப்படும் முதல் 'ஐஸ்கிரீம் அருங்காட்சியகம்' ஆகும்.
கொரோனா தொற்றுச் சூழல் காரணமாக மந்தமடைந்திருக்கும் பயணத்துறையை மீட்டெடுக்கும் முயற்சியின் அங்கமாக இந்தப் புதிய சுற்றுலாத்தலங்கள் அமையும். திறப்பு பற்றிய தகவல்களை நேற்று அறிவித்த அருங்காட்சியகம், சிங்கப்பூரில் இதனை அமைக்கும் பணிக்கு மூன்று ஆண்டுகளானதாகக் குறிப்பிட்டது.
இந்தப் புதிய சுற்றுலாத்தலம் தொடங்கப்படுவதை வரவேற்ப
தாகக் குறிப்பிட்ட சிங்கப்பூர் பயணத்துறைக் கழகத்தின் தலைமை நிர்வாகி கீத் டான், "இதுபோன்ற புத்தாக்கம் மிகுந்த சுற்றுலாத்தலங்கள் சிங்கப்பூரை மேலும் துடிப்புமிக்க நகரமாக்குகிறது. சிறந்த சுற்றுலாத்தலமாக தொடர்ந்து திகழ விரும்பும் சிங்கப்பூர் பயணத்துறையின் நம்பிக்கையை அவை அதி கரிக்கின்றன," என்றும் குறிப்பிட்டார்.
இவ்வாண்டின் பிற்பாதியில் கிளார்க் கீ வட்டாரத்தில் 'ஸ்லிங்ஷாட்' எனும் சாகச சவாரியும் திறக்கப்படவுள்ளது. ஆசியாவிலேயே மிக உயரமான இந்த சாகச சவாரியில் பங்கேற்போர் ஏறத்தாழ 70 மீட்டர் உயரத்திலிருந்து மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் வீசப்படுவர்.
கிட்டத்தட்ட 60,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள 14 நிலையங்களை ஐஸ்கிரீம் அருங்காட்சியகத்தில் பார்வையாளர்கள் காணலாம். அவை அனைத்திலும் ஐஸ்கிரீம்தான் சிறப்பம்சமாக இருக்கும். அங்கு ஐஸ்கிரீம்களைப் பார்வையாளர்கள் சுவைத்தும் பார்க்கலாம்.
அமெரிக்காவைத் தளமாகக்கொண்ட நிறுவனம் அமைத்துள்ள ஐஸ்கிரீம் அருங்காட்சியகத்தில் சிங்கப்பூர் பாணியிலான டிராகன் விளையாட்டுத்திடலும் இருக்கும்.
அந்த அருங்காட்சியகத்தின் ஆகப் பெரிய 'ஸ்பிரிங்கிள்' குளமும் இடம்பெறும். இனிப்புப் பொருள்கள், ஐஸ்கிரீம் போன்றவற்றின் மீது தூவப்படும் சிறிய வண்ணத் துகள்களைப் போன்ற பொருள்கள் இந்தக் குளத்தில் நிரப்பப்பட்டிருக்கும்.
மக்கக்கூடிய, ஆன்டிமைக்ரோபியல் பொருளாலான அந்தத் துகள்கள் அடிக்கடி சுத்திகரிக்கப்படும்.
பார்வையாளர்களின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு சுத்தம், பாதுகாப்பு இடைவெளி, தளவாட வழிகாட்டிக் குறிப்புகள் போன்றவை அங்கு பின்பற்றப்படும் என சிங்கப்பூர் பயணத்துறைக் கழகத்தைச் சேர்ந்த திரு டான் குறிப்பிட்டார்.
கடந்த 2016ஆம் ஆண்டு நியூயார்க்கில் தொடங்கப்பட்ட 'ஐஸ்
கிரீம் அருங்காட்சியகம்' லாஸ் ஏஞ்சலிஸ், சான் ஃபிரான்சிஸ்கோ, மயாமி ஆகிய இடங்களில்
சிறப்பாகச் செயல்படும் நிலையில் அருங்காட்சியகத்தைப் பார்வையிட 200,000 பேர் காத்திருக்கின்றனர்.
வரும் ஆகஸ்ட் மாதம் டெம்ப்சியில் அமையவுள்ள ஐஸ்கிரீம் அருங்காட்சியகத்தைப் பார்வையிட அதன் இணையப் பக்கத்தில் பதிவு செய்யலாம்.
தனிநபருக்கான நுழைவுக் கட்டணம் $38. தினமும் காலை 10 முதல் இரவு 9 மணி வரை செயல்படும் ஐஸ்கிரீம் அருங்காட்சி யகம் செவ்வாய்க்கிழமைகளில் மூடப்பட்டிருக்கும்.