இரு பெண்களுடன் வெவ்வேறு நேரங்களில் பாலியல் உறவு கொண்டபோது அப்பெண்களின் சம்மதம் இல்லாமல் அதை காணொளி எடுத்த மாணவர் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்திலிருந்து (என்யுஎஸ்) நீக்கப்பட்டுள்ளார். முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக கலந்துரையாடி முடிவெடுக்க பல்கலைக்கழகத்தின் ஒழுங்கு வாரியம் கடந்த பிப்ரவரி மாதம் கூடியதாக பல்கலைக்கழகத்தின் செய்தித்தொடர்பாளர் கூறினார்.
பாலியல் ரீதியான தாக்குதலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட நான்காம் ஆண்டு பட்டக் கல்வி மாணவர் பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கப்பட்டதாக கடந்த மாதம் 29ஆம் தேதியன்று இன்ட்ஸ்டகிராமில் பதிவு செய்யப்பட்டது.
குற்றம் சுமத்தப்பட்ட அந்த ஆடவர் பிரின்ஸ் ஜார்ஜஸ் பார்க் ரெசிடன்ஸ் மாணவர் விடுதியின் மாணவர் தலைவர் என்றும் தெரிவிக்கப்பட்டது. அவருக்கு எதிராக புகார் செய்யப்பட்டதை அடுத்து அவர் அந்த விடுதியிலிருந்து வெளியேற்றப்பட்டதாக அறியப்படுகிறது.
தமக்கு எதிராக புகார் செய்த பெண்களுடன் தொடர்புகொள்ள அந்த ஆடவருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு என்யுஎஸ் பரிவுப் பிரிவு ஆதரவுக் கரம் நீட்டியுள்ளதாக பல்கலைக்கழகச் செய்தித்தொடர்பாளர் கூறினார்.
இந்த விவகாரம் தொடர்பாக போலிசார் விசாரணை நடத்துவதால் அதுகுறித்து கூடுதல் விவரங்கள் தர இயலாது என்று பல்கலைக்கழகம் தெரிவித்தது.

