இதர சோதனைகளையும் நடத்தும் ஆற்றலுடன் கொவிட்-19 தேசிய பரிசோதனைக் கூடம்
சிங்கப்பூரில் கொவிட்-19 தொற்றை ஒடுக்க இடம்பெறும் தடுப்பூசி இயக்கம் திட்டமிட்டப்படி நன்கு முன்னேற்றம் கண்டு, விரும்பிய பலன் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், வருங்காலத்தில் ஏற்படக்கூடிய தொற்றுநோயைத் தவிர்த்துக்கொள்ளும் முயற்சிகளையும் சிங்கப்பூர் தொடர்ந்து மும்முரமாக்கி வருகிறது.
எடுத்துக்காட்டாக, கொவிட்-19 பரிசோதனைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வரும் 'ஸ்ட்ராங்ஹோல்ட் டயக்னாசிஸ் லேப்' என்ற சோதனைக்கூடத்தை எதிர்காலத்தில் இதர பரிசோதனைகளுக்கும் பயன்படுத்தலாம் என்று பேராசிரியர் பேட்ரிக் டான் கூறினார்.
இவர், அந்தப் பரிசோதனைக் கூடத்தின் செயல்திட்ட இயக்குநராவார். இவர், அறிவியல் தொழில்நுட்ப ஆய்வு முகவையின் (ஏ*ஸ்டார்) சிங்கப்பூர் மரபணுப் பயிலகம் என்ற அமைப்பின் நிர்வாக இயக்குநருமாவார்.
அந்தச் சோதனைக்கூடம் 2020 நடுப்பகுதி முதல் செயல்பட்டு வருகிறது. அங்கு கொவிட்-19 பிசிஆர் பரிசோதனையை நடத்த முடியும்.
துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட், போன விஸ்தாவில் இருக்கும் சிங்கப்பூரின் உயிரியல் மருத்துவ மையத்தில் (பயோபொலிஸ்) அமைந்துள்ள அந்தப் பரிசோதைனைக் கூடத்தை திங்கட்கிழமை பார்வையிட்டார்.
திரு ஹெங், அதுபற்றி நேற்று ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றினார். இந்த முகவையின் ஆய்வாளர்கள், அறிவியல் வல்லுநர்களையும் சிங்கப்பூரின் இதர அறிவியல் வல்லுநர்களையும் திரு ஹெங் பெரிதும் பாராட்டினார்.
கொவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் இவர்கள் வெளியே தெரியாத கதாநாயகர்கள் என்று துணைப் பிரதமர் பாராட்டினார்.
தேசிய ஆய்வு அறநிறுவனக் கழகம் என்ற அமைப்பின் தலைவராகவும் இருக்கும் திரு ஹெங், சிங்கப்பூரின் ஆய்வுத் துறையாளர்கள் மற்றும் தனியார் துறையினருடன் சேர்ந்து செயல்பட்டு கொரோ னாவுக்கு எதிரான தீர்வுகளை ஏ*ஸ்டார் முகவையைச் சேர்ந்த வல்லுநர்கள் உருவாக்கி இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டார்.
கொரோனா தொற்றைத் சமாளிப்பதில் இந்த வலுவான உறவு சிங்கப்பூருக்கு உயிர்நாடியானதாக இருந்து வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இங்கு கொவிட்-19க்கு எதிரான தடுப்பூசி இயக்கம் நன்கு முன்னேற்றம் கண்டு வருகிறது என்றாலும் கொரோனாவுக்கு எதிரான பரிசோதனைகள், தொற்றுக்கு எதிரான போராட்ட உத்தியில் இன்னமும் மிக முக்கியமான ஒரு தூணாக திகழ்கின்றன.
தடுப்பூசி போட்டுக்கொண்டோரையும் ஏற்கெனவே கொவிட்-19 தொற்றியோரையும்கூட மீண்டும் இந்தக் கிருமி தொற்றிவிடக்கூடிய ஆபத்து இருப்பதாகத் தெரிய வந்துள்ளதே இதற்கான காரணம்.
சிங்கப்பூர், நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 40,000 கொவிட்-19 பரிசோதனைகளை நடத்துவது இலக்கு என்று சென்ற ஆண்டில் அறிவித்தது. கடந்த வாரம் நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 34,800 பரிசோதனைகள் நடத்தப்பட்டதாக சுகாதார அமைச்சின் இணையத் தளம் மூலம் தெரிய வருகிறது.
மக்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டுவரும் போதிலும் கொரோனா பரிசோதனைகளளைத் தொடர வேண்டிய தேவை இருந்துவரும் என்று பேராசிரியர் டான் கூறினார்.