தொற்று குறைந்த நாடுகளிலிருந்து 18,200 பயணிகள் வருகை
கொவிட்-19 தொற்று குறைவாக இருக்கும் பகுதிகளைச் சேர்ந்த பயணிகளுக்குச் சென்ற ஆண்டு செப்டம்பரில் சிங்கப்பூர் தன்னிச்சையாக தன் எல்லைகளைத் திறந்து விட்டது. அந்த விமானப் பயண அனுமதி திட்டத்தின்கீழ் 18,200க்கும் மேற்பட்ட பயணிகள் இங்கு வந்திருக்கிறார்கள்.
இந்த மாதம் 8ஆம் தேதி நிலவரப்படி, அந்தப் பயண அனுமதி திட்டத்தின் கீழ் இங்கு வந்தவர்களில் 79 விழுக்காட்டினர், அதாவது ஏறத்தாழ 12,800 பேர் சீனாவைச் சேர்ந்தவர்கள் என்று சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் விளக்கியது.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஏறத்தாழ 2,400 பேரும் நியூசிலாந்தை சேர்ந்த ஏறக்குறைய 300 பேரும் மற்றவர்களில் அடங்குவர். புருணையில் இருந்து ஏறத்தாழ 800 பேரும் தைவானில் இருந்து 800 பேரும் வந்தனர். வியட்னாமில் இருந்து ஏறக்குறைய 1,100 வருகையாளர்கள் சிங்கப்பூருக்கு வந்தனர். ஆனால் வியட்னாமில் பிப்ரவரி 9ல் கொவிட்-19 தொற்று அதிகமானதால் அந்த நாட்டவர்களுக்கான பயண அனுமதி நிறுத்தப்பட்டது.
விமானப் பயண அனுமதி திட்டத்தின் கீழ், ஓய்வுக்கால வருகை உள்ளிட்ட அனைத்து வகை குறுகியகால வருகைகளுக்கும் அனுமதி கிடைக்கும். இருந்தாலும் பல்வேறு நிபந்தனைகளை அத்தகைய பயணிகள் நிறைவேற்ற வேண்டி இருக்கும்.
ஒரு நேரம், ஒரு வார காலத்திற்குத்தான் அனுமதி செல்லுபடியாகும். ஒருவர் இங்கு வந்ததும் கொவிட்-19 பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும். ஹோட்டல் போன்ற இடத்தில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். தொற்று இல்லை என்றால் வெளியே செல்ல அனுமதி உண்டு. இங்கு இருக்கும் வரை டிரேஸ்டுகெதர் செயலியைப் பயன்படுத்த வேண்டும்.
கொவிட்-19க்குச் சிகிச்சை தேவைப்பட்டால் அதை சொந்தச் செலவில் வருகையாளர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் $30,000 பயணக் காப்புறுதி பாதுகாப்பைப் பெற்றிருக்க வேண்டும் என்பது பிப்ரவரி முதல் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
வழமையானது கை கழுவும் பழக்கம்
சிங்கப்பூரில் பெரும்பாலான மக்கள் நாள் ஒன்றுக்குக் குறைந்தபட்சம் மூன்று தடவை கைகளை சோப்பு போட்டு சுத்தமாகக் கழுவுகிறார்கள். ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் 53 பேரை உள்ளடக்கி ஓர் ஆய்வை நடத்தியது. கடந்த ஓராண்டு காலத்தில் சுகாதாரமான, சுத்தமான பழக்கவழக்கங்களைத் தாங்கள் ஏற்படுத்திக்கொண்டு இருப்பதாக அதில் முக்கால் வாசிப் பேர் கூறினர். பொது சுகாதார இயக்கங்களும் கொவிட்-19 தொற்றிவிடும் அச்சமும் இதற்கான முக்கிய காரணங்கள் என்பது ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.
ஆய்வில் கலந்துகொண்டவர்களில் ஏறக்குறைய அனைவருமே நாள் ஒன்றுக்கு மூன்று முறைக்கும் மேலாக கைகளைக் கழுவுவதாகக் கூறினர். சோப்பு போட்டு கைகளை நன்றாகக் கழுவுவதே துப்புரவுக்கு உகந்த நல்ல தரமான செயல் என்று பெரும்பாலானவர்கள் கூறினர்.
அவர்களில் 19 பேர் கிருமிநாசினியையும் பயன்படுத்தி கை கழுவுகிறார்கள். கை கழுவும் தொட்டியைப் பயன் படுத்துவது வசதியாக இல்லாதபோது கிருமிநாசினியைப் பயன்படுத்துவதாக 17 பேர் தெரிவித்தனர்.
இதனிடையே, எந்தவோர் இடமும் சுத்தமாகத் தெரிந்தாலும் அதைத் தொட்ட பிறகு கைகளைக் கழுவுவது நல்ல பழக்கம் என்று நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தின் உணவு, அறிவியல் தொழில்நுட்பச் செயல்திட்ட இயக்குநர் பேராசிரியர் வில்லியம் சென் தெரிவித்தார்.
தடுப்பூசி போட்டுக்கொண்டோரை கிருமி தொற்ற காரணம்
கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு எதிரான தடுப்பூசி, அந்தத் தொற்று காரணமாக கடுமையான பாதிப்புகள் ஏற்படாமல் மக்களைப் பாதுகாக்கிறது.
இருந்தாலும் ஊசி போட்டுக்கொண்ட பிறகு அறவே தொற்று ஏற்படாமல் முற்றிலும் தடுத்துவிடக்கூடிய ஆற்றல் தடுப்பூசிக்கு இல்லை என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
தடுப்பூசியை இரு முறை போட்டுக்கொண்ட போதிலும் வெளிநாட்டு ஊழியர் ஒருவருக்கு மீண்டும் தொற்று வந்துவிட்டது. இதையடுத்து வல்லுநர்கள் அவ்வாறு கூறினர். என்றாலும் ஊசி போட்டுக்கொள்வது கட்டாயமானது என்று அவர்கள் வலியுறுத்தினர்.