தேசிய பூங்காக் கழக அதிகாரி லீ சூன் பிங் என்பவர் மீது லஞ்சம், மோசடிக் குற்றச்சாட்டுகள் நேற்று சுமத்தப்பட்டன. மேலும் பல பெண்களின் பாவாடைக்குள் புகைப்படங்களை எடுத்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஒன்பது மானபங்கக் குற்றச்சாட்டுகளும் ஒரு மோசடிக் குற்றச்சாட்டும் ஓர் ஊழல் குற்றச்சாட்டும் 48 வயதான லீ மீது சுமத்தப்பட்டன.
சிங்கப்பூரில் தோட்டக் கலை கலாசாரத்தை ஊக்குவிக்கும் தேசிய பூங்காக் கழகத்தைச் சேர்ந்த 'கம்யூனிட்டி இன் புளூம்' எனும் அமைப்பின் மேலாளராக லீ இருந்தார்.
கடந்த ஆண்டு பிப்ரவரியில், பூங்காக் கழகத்திற்கு 10,000 தொப்பிகளை வழங்க வேண்டிய ஒரு விற்பனையாளரிடமிருந்து லீ $10,000 லஞ்சம் பெற முயன்றதாகக் கூறப்படுகிறது. ஆனால் அந்த விற்பனையாளர் 5,000 தொப்பிகளை மட்டுமே வழங்கியுள்ளார்.
தாமதமாக விநியோகம் செய்ததற்கான கட்டணத்தை விதிக்காமல் முழு ஒப்பந்தத் தொகையான $23,300ஐ விற்பனையாளருக்கு பூங்காக் கழகம் செலுத்தியதாகக் கூறப்பட்டது. இதில், கழகத்தின் கணக்கு நிர்வாகியை லீ ஏமாற்றியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மற்ற குற்றச்சாட்டுகளில், லீ தனது தொலைபேசியைப் பயன்படுத்தி 2015ஆம் ஆண்டுக்கும் 2019ஆம் ஆண்டுக்கும் இடையில் பல பெண்களின் பாவாடைக்குள் புகைப்படங்கள் எடுத்ததாகக் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர்களில் பூங்காக்களில் பயன்படுத்தப்படும் தாவரங்களை வழங்கும் தோட்டத்தில் வேலை செய்பவர்களும், ரயில்களிலும் அருகிலுள்ள பள்ளியிலும் இருக்கும் பெண்களும் அடங்குவர்.
ஊழல் மற்றும் பிற குற்றங்களை சிங்கப்பூர் கடுமையாக எதிர்கொள்ளும் என்று ஊழல் ஒழிப்பு விசாரணைப் பிரிவு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியது.
லீ $20,000 பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். மே 25ஆம் தேதி அவர் மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலையாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஊழல் குற்றம் நிரூபிக்கப்பட்டால், லீக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறை அல்லது $100,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
மோசடிக் குற்றம் நிரூபிக்கப்பட்டால், 10 ஆண்டுகள் வரை சிறை, அபராதம் விதிக்கப்படலாம்.
பாவாடைக்குள் புகைப்படம் எடுத்த ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் ஓராண்டு வரை சிறை அல்லது அபராதம் விதிக்கப்படலாம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

