சுகாதாரம் தொடர்பான காப்புறுதி விவகாரங்களைக் கையாள, புதிய குழு ஒன்றை சுகாதார அமைச்சு நியமித்துள்ளது.
வரும் 27ஆம் தேதி முதல் அதன் பணிகளைத் தொடங்கவுள்ள இக்குழு, சுகாதாரப் பராமரிப்பு காப்புறுதி அமைப்பின் அதிகரிக்கும் செலவுகளை மேலும் சிறப்பாக நிர்வகிப்பது குறித்துப் பரிந்துரை செய்யும்.
மேலும், சுகாதாரப் பராமரிப்பு காப்புறுதி தொடர்பான கோரிக்கைகளால் ஏற்படும் புகார்கள், சச்சரவுகள் ஆகியவற்றை ஆராயும் தளங்களை அமைப்பதிலும் இக்குழு வழிகாட்டும் என்று கூறப்பட்டது.
சிங்கப்பூர் மருத்துவக் கழகம், சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கம், கட்டண அளவீட்டு ஆலோசனைக் குழு, வாழ்நாள் காப்புறுதிச் சங்கம், சிங்கப்பூர் மருத்துவச் சங்கம், தனியார் மருத்துவமனைகள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்த 'பலதரப்பு சுகாதாரப் பராமரிப்பு காப்புறுதிக் குழு'வில் இடம்பெறுவர் என்று கூறப்பட்டது.
சுகாதார அமைச்சு கொள்கைத் துறையின் துணைச் செயலாளர் ஙியாம் சியூ யிங், மருத்துவச் சேவைப் பிரிவின் துணை இயக்குநர் டாக்டர் டேஃப்னி கூ ஆகியோர் இக்குழுவின் தலைமை பொறுப்பை ஏற்றுள்ளனர்.
காப்புறுதி நிறுவனங்களில் மருத்துவர் குழு இடம்பெறுவது தொடர்பில் அண்மையில் சிங்கப்பூர் மருத்துவச் சங்கத்திற்கும் வாழ்நாள் காப்புறுதி சங்கத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
'ஒருங்கிணைந்த காப்புறுதித் திட்டம்' தொடர்பில் காப்புறுதி நிறுவனங்கள் மீது தனியார் பிரிவு மருத்துவர்கள் தங்களின் அதிருப்தியைத் தெரிவித்திருந்தனர். காப்புறுதிதாரர்களுக்கான மருத்துவர் குழுவில் தங்களின் மருத்துவ நிபுணர்கள் பலர் இடம்பெறவில்லை என்றும் ஒரு சாராரை விலக்கி வைக்கும் வகையில் காப்புறுதி நிறுவனங்களின் மருத்துவக் குழுக்கள் உள்ளன என்றும் அவர்கள் புகார் கூறினர்.
மருத்துவர்கள் குழுவில் இடம்பெற எவ்வாறு தேர்வாகின்றனர் என்பது குறித்தும் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்று சிங்கப்பூர் மருத்துவச் சங்கம் கூறியுள்ளது.
இந்த மோதலை அடுத்து, சுகாதார அமைச்சு இத்தகைய விவகாரங்களைக் கையாள ஒரு குழுவை நியமிக்கும் என்று சுகாதார மூத்த துணை அமைச்சர் கோ போ கூன் முன்னர் கூறியிருந்தார்.
சிங்கப்பூரின் சுகாதாரப் பராமரிப்பு காப்புறுதி அமைப்பை மேம்படுத்தும் வகையில் இனி புதிதாக அமைக்கப்பட்டுள்ள குழுவே அமைச்சு, மருத்துவர்கள், காப்புறுதி நிறுவனங்கள், மருத்துவமனைகள் ஆகிய தரப்புகளின் ஒருங்கிணைந்த செயல்பாட்டு அடிப்படைத் தளம் என்று சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அதன் அறிக்கையில் குறிப்பிட்டது.

