பணமோசடி, பயங்கரவாதச் செயல்களுக்கு நிதி அளித்தல் ஆகியவற்றின் தொடர்பில் போதுமான பாதுகாப்பு அம்சங்களைக் கடைப்பிடிக்காத வங்கி ஒன்றுக்கு $1 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் தனியார் வங்கியான 'பேங்க் ஜே. சாஃப்ரா சரசின்' (பிஜேஎஸ்) கீழ் இயங்கி வரும் சிங்கப்பூர் கிளைக்கு, மார்ச் 2014க்கும் செப்டம்பர் 2018க்கும் இடைப்பட்ட காலத்தில் நடந்த விதிமீறல்களுக்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டது.
சரியான, நியாயமான வழிகளில் வாடிக்கையாளர்களின் நிதிக்கான மூலத்தைக் கண்டறியத் தவறியது உட்பட வங்கிக் கிளையில் பல்வேறு விதிமீறல்கள் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
பிஜேஎஸ் தானே உறுதிப்படுத்தாமல் பலமுறை வாடிக்கையாளர்கள் அளித்த உத்தரவாதத்தை நம்பியிருந்ததாகவும் கூறப்படுகிறது.
வழக்கத்திற்கு மாறான பெருமளவிலான அல்லது அசாதாரண வாடிக்கையாளர் பரிவர்த்தனைகள் குறித்து ஆராயத் தவறியதாகவும் கூறப்படுகிறது.
வாடிக்கையாளர்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்ளும்போதும் அவர்களின் வர்த்தக உறவுகளைக் கண்காணிக்கும்போதும் இந்த விதிமீறல்கள் நேர்ந்ததாக சிங்கப்பூர் நாணய ஆணையம் நேற்று தெரிவித்தது. சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு ஒரு வழித்தடமாக பயன்படக்கூடிய அபாயத்திற்கு பிஜேஎஸ் தன்னை உட்படுத்திக்கொண்டதாகக் கூறப்பட்டது.

