கடந்த ஆண்டில் மட்டும் சராசரியாக பிற நாட்டினரைத் திருமணம் செய்துகொண்ட 3,920 தம்பதியர், திருமணத்திற்கு முந்திய விசா சோதனைக்காக விண்ணப்பித்துள்ளனர். சிங்கப்பூரரைத் திருமணம் செய்யும் வெளிநாட்டினர், நீண்ட கால வருகை அட்டைக்குத் தகுதிபெறும் வாய்பை ஆராயும் சோதனையாக உள்ளது.
திருமணத்திற்கு முந்திய நீண்ட கால வருகை அட்டை சோதனையின்மூலம் தம்பதியர் தங்களைப் பற்றிய முக்கியமான தகவல்களைப் பரிமாறிக்கொள்ள அனுமதிக்கிறது. இதற்கு முன்னர் தாங்கள் திருமணம் செய்துகொண்டவர்கள், முன்னாள் திருமணங்களின் மூலம் பிறந்த பிள்ளைகள், வருமானம், குற்றப் பதிவுகள் போன்றவற்றைப் பற்றிய தகவல்களைப் பகிர்வதற்கு இது வாய்ப்பளிப்பதாக உள்துறை அமைச்சு பேச்சாளர் தெரிவித்தார்.
பிற நாட்டினரைத் திருமணம் செய்யும் சிங்கப்பூரர்களின் எண்ணிக்கை கூடி வருகையில் இந்த சோதனை 2015ஆம் ஆண்டு ஜனவரியின்போது அறிமுகம் செய்யப்பட்டது. 2019ஆம் ஆண்டில், 4,426 சிங்கப்பூர் ஆடவர்கள், பிற நாடுகளைச் சேர்ந்த பெண்களைத் திருமணம் செய்தனர். குறைந்தது ஒரு சிங்கப்பூரரைச் சம்பந்தப்படுத்தும் இந்த வகை, ஒவ்வோர் ஐந்து திருமணங்களில் ஒன்று என்று அரசாங்கத்தின் மக்கள் தொகை பற்றிய 2020 அறிக்கை குறிப்பிடுகிறது.
ஒருவரை ஒருவர் சந்தித்த வெகு குறுகிய காலக்கட்டத்தில் திருமணத்தில் இவர்கள் இணைகின்றனர். இவ்வாறு இணையும் தம்பதியரில் ஒருவர் அல்லது இருவர் தங்களது பின்னணியைப் பற்றிய விவரங்களை வெளிப்படையாக பகிர்வதில்லை என்று சமூக ஊழியர்களும் வழக்கறிஞர்களும் தெரிவித்தனர். எனவே இந்தச் சோதனையின் மூலம் வெளிநாடுகளைச் சேர்ந்த தம்பதியருக்கு ஏற்படும் சவால்களைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ளலாம் எனப் பகிரப்பட்டுள்ளது.

