உலகம் முழுவதும் நூறு மில்லியனுக்கும் அதிகமான, இணையத் தொடர்புடன் கூடிய சாதனங்கள் எளிதில் பாதிப்புக்குள்ளாகும் ஆபத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை அடுத்து சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு அமைப்பு ஓர் எச்சரிக்கையை விடுத்துள்ளது.
மருத்துவச் சாதனங்கள், அணியும் வகையிலான உடற்தகுதிச் சாதனங்கள் முதல் எரிசக்தி, ஆற்றல் துறைகளைச் சேர்ந்த முக்கியத் தொழிலகக் கட்டுப்பாட்டுச் சாதனங்கள் வரை அவற்றில் அடங்கும்.
"பாதிக்கப்பட்ட தொழில்நுட்ப அடுக்குகளின் நிர்வாகிகள் சரியாக்கக் குறிமுறைகளை உடனடியாகப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்," என்று இணையப் பாதுகாப்பு அமைப்பின் கணினிப் பாதுகாப்பு அவசரகாலச் செயற்குழு (சிங்செர்ட்) தெரிவித்து இருக்கிறது.
பாதிப்புகளுக்குத் தீர்வளிக்கக்கூடிய பாதுகாப்புக் குறிமுறைகள் ஏற்கெனவே அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டன.
சுகாதாரப் பராமரிப்பு மற்றும் அரசாங்கத் துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களே பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கணினிப் பாதுகாப்பு ஆய்வாளர்கள் பலரும் தெரிவித்துள்ளனர். பொழுதுபோக்கு, சில்லறை விற்பனை, உற்பத்தி, நிதி சேவைகள், தொழில்நுட்பம் ஆகியவை பாதிப்புக்குள்ளான மற்ற துறைகள்.
'டிஎன்எஸ்' எனும் செயற்களப் பெயர் அமைப்பை நச்சுநிரல்கள் பாதிக்கின்றன.
'Name:Wreck' என ஒட்டுமொத்தமாக அழைக்கப்படும் அந்த நச்சுநிரல்கள், 'ஸ்டேக்ஸ்' எனப்படும் வரிசைமுறை தகவல் அடுக்கைப் பாதிப்பதாக 'ஃபோர்ஸ்கௌட் ரிசர்ச் லேப்ஸ்' எனும் இணையப் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
பாதிப்புக்குள்ளான வரிசைமுறை தகவல் அடுக்கைக் கொண்ட அனைத்துச் சாதனங்களுக்கும் ஆபத்து இல்லை எனக் கூறிய அந்நிறுவனம், குறைந்தது 100 மில்லியன் சாதனங்களேனும் ஆபத்தில் இருப்பதாகக் குறிப்பிட்டது.
தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்பைச் சேர்ந்த உயர்திறன் சேவையகங்கள், திறன்பேசிகள், அச்சுப்பொறிகள், உடற்தகுதி அணிகருவிகள், ஆளில்லாப் போர் விமானம், 'எம்ஆர்ஐ ஸ்கேனர்' போன்ற முக்கிய மருத்துவச் சாதனங்கள், தொழிலகத் தயாரிப்பு இயந்திர மனிதர்கள் உள்ளிட்ட இணையத் தொடர்புடன் கூடிய பல்வகைச் சாதனங்களும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
ஐரோப்பிய நாடுகள், கனடா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளே அதிக பாதிப்புக்குள்ளாகி இருக்கலாம் என நம்பப்படுகிறது.
சிங்கப்பூரில் எத்தனை சாதனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்பது தெளிவாகத் தெரியவில்லை.
பாதுகாப்புக் குறிமுறைகள் ஏற்கெனவே வந்துவிட்டாலும், சில சாதனங்களில் அவற்றை நிறுவுவதற்குச் சிரமமாக இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.
எடுத்துக்காட்டாக, பாதிக்கப்பட்ட சாதனங்கள் மைய அளவில் நிர்வகிக்கப்படாவிடில், ஒவ்வொரு சாதனத்திலும் தனித்தனியாக பாதுகாப்புக் குறிமுறையை நிறுவ வேண்டும்.
பாதுகாப்புக் குறிமுறை கிடைக்காவிடில், கூறாக்கும் கட்டுப்பாடுகளையும் வெளிப்புறத் தொடர்புவழிகளைக் கட்டுப்படுத்துதல், பாதிப்புக்குள்ளாக வாய்ப்புள்ள சாதனங்களைத் தனிமைப்படுத்துதல் போன்ற முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுக்கும்படி நிறுவனங்களுக்கு சிங்செர்ட் அறிவுறுத்தி இருக்கிறது.

