வெளியே செல்ல விதிக்கப்பட்ட தடையை மீறிய 20 வயது பெண் அதிகாரிகளிடம் சிக்காமல் இருக்க தமது முன்னாள் காதலருக்கு எதிராக பொய்ப் புகார் செய்ததாக தெரியவந்துள்ளது. தமது முன்னாள் காதலர் தம்மைத் தாக்கி வேனுக்குள் தம்மை வலுக்கட்டாயமாகத் தள்ளியதாக அப்பெண் கூறியிருந்தார்.
ஆனால் விசாரணையில் அது பொய் என தெரியவந்துள்ளது. உண்மையில், தொழில்நட்பக் கல்விக் கழக மாணவியான தருணா திருநாவுக்கரசு சீர்திருத்தப் பள்ளியிலிருந்து விடுவிக்கப்பட்டு கண்காணிப்புத் திட்டத்தின்கீழ் வைக்கப்பட்டிருந்தார்.
வெளியே செல்லக்கூடாது என அவருக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை மீறி கடந்த ஜனவரி மாதம் 19ஆம் தேதியன்று அவர் வெளியே சென்று தமது நண்பர்களுடன் மதுபானம் அருந்தியதாக அறியப்படுகிறது. வேண்டுமென்றே தமது முன்னாள் காதலருக்கு எதிராகப் பொய்ப் புகார் செய்ததை தருணா ஒப்புக்கொண்டார்.
தருணா சீர்திருத்தப் பள்ளிக்குச் சென்ற காரணமும் வெளியே செல்லக்கூடாது என்று அவருக்கு விதிக்கப்பட்ட தடை குறித்தும் நீதிமன்ற ஆவணங்களில் தெரிவிக்கப்படவில்லை.
தருணா விசாரணைக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு இரண்டு ஆண்டு வரை சிறை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

