தோ பாயோவில் நேற்று (ஏப்ரல் 15) பிற்பகல் ஏற்பட்ட கார் விபத்தில் காயமுற்ற ஆறு வயது சிறுவன் ஒருவன் சுயநினைவற்ற நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டான்.
கவனக்குறைவால் அச்சிறுவனுக்கு காயம் விளைவித்ததற்காக 51 வயது ஆண் ஓட்டுநர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
லோரோங் 6 தோ பாயோவில் ‘சாஃப்ரா தோ பாயோ’ கட்டடத்துக்கு வெளியே இந்த விபத்து நிகழ்ந்ததாக சீன நாளிதழான வான்பாவ் செய்தி வெளியிட்டது.
அந்த வெள்ளை நிற காரின் சக்கரத்திற்கு அடியில் அந்தச் சிறுவன் சிக்கிக்கொண்டதாக சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் கூறினார். அப்போது அச்சிறுவனுடன் அவனது தாயாரும் உடனிருந்தார்.
அந்த காரைத் தூக்கிவிட அங்கிருந்த மூன்று வழிப்போக்கர்கள் உதவ முற்பட்டனர். ஆனால், அவர்களால் அதைச் செய்ய முடியவில்லை.
சம்பவ இடத்தில் அச்சிறுவனின் தாயார் அதிர்ச்சியுடன் காணப்பட்டார். சம்பவம் குறித்து விசாரணை நடைபெறுகிறது.