ஒற்றைத் தாயார் ஒருவருக்கு குறைபாடுகளுடன் கூடிய பொது வாடகை வீட்டை ஒதுக்கியதற்காக வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு உள்ளது.
வீட்டில் காணப்பட்ட சரிசெய்யப்படாத குறைபாடுகளை படம் எடுத்து அவற்றை ஃபேஸ்புக்கில் அந்த மாது பதிவேற்றி இருந்தார்.
இது பற்றி தனக்குத் தெரியும் என்று நேற்று ஃபேஸ்புக் பக்கத்தில் கழகம் தெரிவித்தது.
அந்த மாதிடம் தான் மன்னிப்பு கேட்டுக்கொண்டதாகவும் வேறு வீட்டிற்கு அவர் மாறுவதற்கான ஏற்பாடுகளைத் தான் செய்து உள்ளதாகவும் கழகம் கூறியது.
தனக்கு ஒதுக்கப்பட்ட வீடு பேய் படத்தில் வருவது போல இருந்ததாக திருவாட்டி ஃபெலிசியா ஓங் என்ற அந்த மாது வியாழக்கிழமை ஃபேஸ்புக்கில் குறிப்பிட்டு இருந்தார். கூரையில் இருந்து மின்கம்பிகள் தொங்கின. தரையில் கற்கள் வெடிப்போடி இருந்தன. சன்னல் கம்பிகள் உடைந்து துருபிடித்து இருந்தன. கழிவறைக் கதவும் தொட்டியும் உடைந்திருந்தன என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே, வாடகை வீட்டின் சாவியை ஒப்படைப்பதற்கு முன்பாக வீடு குடியேறுவதற்கு தோதாக இருக்கிறது என்பதை பொதுவாக கழகம் உறுதிப்படுத்தும். ஆனால் இந்த வீட்டைப் பொறுத்தவரை, பழுதுபார்ப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு முன்பாகவே வீட்டின் சாவி கொடுக்கப்பட்டுவிட்டது என்று கழகம் விளக்கியது.
நிலவரம் தெரிந்த உடனேயே அந்த மாதுடன் தொடர்புகொண்டு அவரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டதாகவும் மாற்று வீட்டுக்கான சாவியை வெள்ளிக்கிழமையே (நேற்று) பெற்றுக்கொள்ளலாம் என்று அவரிடம் தெரிவிக்கப்பட்டதாகவும் கழகம் குறிப்பிட்டது.

