தாம்சன் ரோட்டில் உள்ள ஒரு நான்கு மாடி கட்டடம் பாதுகாப்பு காரணங்களுக்காக இடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அந்தக் கட்டடம் வடக்கு-தெற்கு வழித்தடத்துக்கான சுரங்கப்பாதை அமையும் இடத்துக்கு அருகே உள்ளது. அதைக் கட்டி 57 ஆண்டுகள் ஆகின்றன. அதில் 12 வீடுகளும் நான்கு கடைகளும் இருக்கின்றன.
எண் 68-74 தாம்சன் ரோடு முகவரியில் அமைந்துள்ள அந்தக் கட்டடம் கையகப்படுத்தப்பட்டு இடிக்கப்படும் என்றும் அதற்குப் பிறகு சுரங்கப்பாதை பணிகள் தொடங்கும் என்றும் நிலப் போக்குவரத்து ஆணையம், சிங்கப்பூர் நில ஆணையம், கட்டட, கட்டுமான ஆணையம் ஆகியவை கூட்டறிக்கையில் தெரிவித்தன.
வடக்குப் புறத்தில் இருக்கும் நகர்களை இணைக்கும் அந்தச் சுரங்கப்பாதைப் பணிகள் தொடங்குவதற்கு முன்பாக அந்தக் கட்டடத்தின் அடித்தளத்தைப் பலப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக நிலப் போக்குவரத்து ஆணையம் அந்தக் கட்டடத்தின் பலத்தை முற்றிலும் பரிசோதித்தது.
கட்டடத்தின் அடித்தளம் சீராக இல்லை என்பதை பொறியாளர்கள் சென்ற ஆண்டு கண்டனர். அடித்தளத்தைப் பலப்படுத்தினால்தான் சுரங்கப்பாதை வேலைகளைக் கட்டடம் தாங்கி நிற்கும் என்று பொறியாளர்கள் கண்டனர்.
பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு அந்தக் கட்டடத்தில் இருந்த அனைவரும் வேறு இடங்களுக்கு மாறினர். பிறகு மேலும் பரிசோதனைகள் நடத்தப்பட்டன.
எதிர்பார்க்கப்பட்டதைவிட அந்தக் கட்டடத்தின் கான்கிரீட்டுகள் பலவீனமாக இருப்பது பரிசோதனைகள் மூலம் தெரியவந்தது.
அந்த 776 சதுர மீட்டர் பரப்புள்ள நிலப்பகுதி தொடர்பான பற்றுமானம் குறித்து நேற்று அரசிதழில் வெளியிடப்பட்டது.
இதனிடையே, அக்கட்டடத்தில் உள்ள 16 வீடுகள் மற்றும் கடைகளின் உரிமையாளர்களுடன் அணுக்கமாகச் செயல்பட்டு அவர்களுக்குத் தேவைப்படும் உதவிகளைச் செய்யப்போவதாக போக்குவரத்து ஆணையமும் நில ஆணையமும் தெரிவித்தன.
நில ஆணையம் வரும் ஜூலையில் கட்டடத்தைக் கையகப்படுத்தும். இந்த ஆண்டு முடிவில் இடிப்புப் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கட்டடத்தைக் கையகப்படுத்தி இடிப்பதால் வடக்கு-தெற்கு வழித்தட கட்டுமானத்தின் கால அளவில் பாதிப்பு இராது என அதிகாரி கள் தெரிவித்துள்ளனர்.