குற்றம் புரிவதற்காக 'அடையாளம் அறியப்படாத' கார்கள் வேண்டும் என நாடியோருக்கு, அவற்றை விற்க உதவிய 28 வயது சிங்கப்பூரருக்கு 26 மாதம், இரண்டு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நிலப் போக்குவரத்து ஆணையம், சிங்கப்பூர் சுங்கச்சாவடி ஆகியவற்றை ஏமாற்றியதன் தொடர்பிலான குற்றச்சாட்டுகளை சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர் டான் வென் ஜியெ, சென்ற மாதம் ஒப்புக்கொண்டார்.
பதிவேட்டிலிருந்து அகற்றப்பட்ட கார்களை விற்பது, வாடகைக்குப் பெறுவது ஆகியவை தொடர்பில் லீ வுய் லியாங் என்பவருடன் டான் 2018 செப்டம்பரில் குற்றம் புரிந்ததாக கூறப்படுகிறது.
வாகன உரிமைச் சான்றிதழ் காலாவதியாகும் நிலையில் உள்ள கார்களை டான் வாங்கி, அவற்றில் மாற்றங்கள் செய்து மீண்டும் வேறொருவரிடம் விற்றார் எனக் கூறப்படுகிறது.
ஒரே நிறம், வடிவம், மாதிரி என்ற அடிப்படையில் ஏற்கெனவே பதிவேட்டில் உள்ள ஒரு வாகனத்தின் பதிவு எண் பலகை போலவே போலி பலகையை டான் தயாரித்து அந்த கார்களை விற்றுவந்ததாக கூறப்படுகிறது.
'கரோசல்' தளத்தில் இவ்வாறு மாற்றம் செய்யப்பட்ட கார்கள் ஓர் இடைத்தரகர் மூலம் விற்கப்பட்டோ வாடகைக்கு விடப்பட்டோ வந்தன.
'கேள்விகள் ஏதும் கேட்கப்படா' என்ற அடிப்படையில் இந்த பரிவர்த்தனைகள் நடந்து வந்தன.
காரை வாங்குவோர், முறையாக வாகனம் ஓட்டும் தகுதியுடையவரா என்பது குறித்தும் தளத்தில் எவ்வித உறுதியும் செய்யப்படுவதில்லை என்று கூறப்பட்டது.
இத்தகைய குற்றங்கள் இனி நடக்கக்கூடாது என்பதைத் தடுக்கும் வகையில் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று நீதிபதி மார்வின் பே கூறினார்.
தண்டனைக்கு எதிராக டான் மேல்முறையீடு செய்வதாகக் கூறப்பட்டது.

