ஒரு மருத்துவமனையிலிருந்து மற்றொரு மருத்துவமனைக்கு நோயாளி ஒருவரைக் கொண்டு சென்றபோது, தூக்குப் படுக்கை தள்ளுவண்டியிலிருந்து நோயாளி விழுந்துவிட்டார். பின்னர், அவர் இறந்தும் போனார். இந்நிலையில், அவருக்கு நேர்ந்த மரணம், ஒரு மருத்துவ விபத்து என்று மரண விசாரணை நீதிமன்றத்தில் தீர்ப்பானது. இதற்கிடையே 2018ஆம் ஆண்டில் திரு ரஸிப் பஹ்ரோம் என்ற அந்த 55 வயது நோயாளிக்கு நேர்ந்த மரணம் தொடர்பில் பல்வேறு அபாயகரமான அம்சங்கள் அனைவரின் கவனத்திற்கும் வந்துள்ளன.
மாரடைப்பு வந்ததை அடுத்து, திரு ரஸிப்பைக் கவனித்துக்கொண்டதில் சில குறைபாடுகள் இருந்ததாகவும் அவற்றில் ஒன்றே அவரது இறப்புக்கும் இட்டுச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
திரு ரஸிப்புக்கு மாரடைப்பு ஏற்பட்டு, வலி மோசமடைய கூ டெக் புவாட் மருத்துவமனைக்குச் சென்றார். உடனே, அவருக்குச் சிகிச்சை தொடங்கப்பட்டது. இருப்பினும், திரு ரஸிப்பின் இதயச் செயல்பாடு மோசமாகவே இருந்ததால் சிங்கப்பூர் தேசிய இதய நிலையத்தின் உதவியை மருத்துவமனை நாடியது. நிலையத்திலிருந்து வந்த மருத்துவக் குழு, திரு ரஸிப்புக்குத் தேவையான சிகிச்சையை அளித்ததை அடுத்து நிலை சற்று சீராக இருந்தது.
இருப்பினும், சுவாசிப்பதற்காக நோயாளிக்குப் பயன்படுத்தப்பட்ட சாதனத்தில் இருந்த மின்கலம், சிங்கப்பூர் பொது மருத்துவமனையை அடையும்போது முழுமையாக முடிந்துவிட்டது. அச்சாதனம் இல்லாமலும் திரு ரஸிமின் உடல்நிலை சீராகவே இருந்தது.
மருத்துவமனைக்கு வந்ததும் தூக்குப் படுக்கை தள்ளுவண்டியின் ஒரு பக்கத்தை மருத்துவ வண்டி ஓட்டுநர் தூக்கிப் பிடித்திருந்த நேரத்தில், மறு முனை கீழே விழுந்தது. மறு முனையில் திரு ரஸிப்பின் தலை இருந்தது.
ஜூன் 21ஆம் தேதியன்று திரு ரஸிப் உயிரிழந்தார்.

