சிங்கப்பூரில் நேற்று நண்பகல் வாக்கில் புதிதாக 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. சமூகத் தொற்றுக்கு ஆளான நால்வரும் அவர்களில் அடங்குவர். புதிதாகக் கிருமி தொற்றியோரையும் சேர்த்து கொவிட்-19 பாதிப்பு ஏற்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 60,808 ஆக உயர்ந்து இருக்கிறது.
நேற்று தொற்று உறுதிப்படுத்தப்பட்டோரில் 35 பேர் வெளிநாடுகளில் இருந்து இங்கு வந்தவர்கள். தனிமையில் இருக்க வேண்டும் என்று அவர்களுக்கு உத்தரவிடப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. அவர்களில் 10 சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகளும் எட்டு வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்களும் அடங்குவர்.
வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளில் நேற்று புதிதாக யாருக்கும் தொற்று இல்லை.
சமூகத்தில் அண்மையில் ஏற்பட்டுள்ள தொற்றுகளைக் கவனிக்கும்போது இங்கு கொவிட்-19 கிருமி துடைத்து ஒழிக்கப்படவில்லை என்பது தெரியவருகிறது.
மக்கள் கொஞ்சம் அலட்சியமாக இருந்துவிட்டால் புதிய தொற்றுகளும் தொற்றுக் குழுமங்களும் ஏற்படக்கூடிய வாய்ப்புள்ள தாக அமைச்சு எச்சரித்தது.
சிங்கப்பூரில் வெள்ளிக்கிழமைசமூகத் தொற்று ஏற்பட்ட இருவரில் ஒருவர் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மூத்த ஆய்வாளர் என்றும் அமைச்சு கூறியது. இந்தியாவைச் சேர்ந்த அந்த 34 வயது ஆய்வாளர், டிசம்பர் 22 முதல் மார்ச் 21 வரை இந்தியாவில் இருந்தார். பிறகு இங்கு வந்த அவர், தனிமைப்படுத்தப்பட்டார்.
அந்த உத்தரவை நிறைவேற்றிய பிறகு முதல் நாளாக ஏப்ரல் 12ஆம் தேதி திங்கட்கிழமை அவர் வேலைக்குப் போனார்.
சிங்கப்பூருக்கு அந்த ஆய்வாளர் வந்த விமானத்தில் வந்த வேறு ஒருவருக்கு தொற்று இருந்ததாக தெரியவந்தது. கிருமி தொற்றியவருடன் அந்த ஆய்வாளர் விமானத்தில் அணுக்கத் தொடர்பில் இருந்தார் என்பதும் தெரியவந்தது.
மார்ச் 24 முதல் ஏப்ரல் 11 வரை அந்த ஆய்வாளர் தனிமைப்படுத்தப்படும் இடம் ஒன்றில் தனித்து வைக்கப்பட்டார். மார்ச் 25, ஏப்ரல் 3, ஏப்ரல் 10 ஆகிய தேதிகளில் அவருக்கு மூன்று பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அவருக்குத் தொற்று இல்லை என்பதையே அப் பரிசோதனைகள் காட்டின.
திங்கட்கிழமை மாலையில் உடல் வலி உள்ளிட்ட பல பிரச்சினைகளைச் சந்தித்ததால் அவர் வீட்டிலேயே இருந்துவிட்டார். புதன்கிழமை அவருக்குக் காய்ச்சல் ஏற்பட்டது. பலதுறை மருந்தகத்திற்குச் சென்றார்.
கொவிட்-19 பரிசோதனை நடத்தப்பட்டது. தொற்று இருந்தது அடுத்த நாள் தெரியவந்தது. மருத்துவ வாகனத்தில் அவர் தேசிய தொற்றுநோய் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டார்.
வெள்ளிக்கிழமை சமூகத்தொற்றுக்கு ஆளான மற்றொருவர் இந்தோனீசியாவை சேர்ந்த 44 வயது ஆடவர்.

