இந்து இளங்கோவன்
பணியிடத்தில், பெண்கள் ஆண்
களுக்கு நிகரானவர்களாகவும், சமமான மதிப்புமிக்க பங்களிப்புகளைக் கொண்டவர்களாகவும், ஊக்கமளிக்கும் தலைவர்களாகவும் இருப்பதை நாம் அங்கீகரிக்க வேண்டும். இந்தக் கருத்தை
வலியுறுத்தியது நேற்று மாலை சிங்கப்பூர் கல்சா சங்க கட்டடத்தில் நடைபெற்ற 'சிங்கப்பூர் மகளிர் மேம்பாடு குறித்த உரையாடல்கள்' என்னும் கலந்துரையாடல் நிகழ்வு.
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு சிங்கப்பூர் பெண்களைக் கொண்டாட 2021-ஆம் ஆண்டை அர்ப்பணித்துள்ளது.
"சிங்கப்பூர் மகளிர் மேம்பாடு குறித்த உரையாடல்கள்" தொடர் கடந்த ஆண்டு செம்டம்பர் 20-ஆம் தேதி தொடங்கப்பட்டது. இது பெண்களின் வளர்ச்சி சார்ந்த கருத்துகளையும் பரிந்துரைகளையும் சேகரிக்கும் தேசிய முயற்சியின் ஒரு பகுதி.
உரையாடல்களிலிருந்து சேகரிக்கப்படும் கருத்துகளும் யோசனைகளும் ஒரு வெள்ளை அறிக்கையில் ஒருங்கிணைக்கப்பட்டு இவ்வாண்டின் இறுதிக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். சிங்கப்பூர் முழுக்க நூற்றுக்கும் மேற்பட்ட உரையாடல் அமர்வுகள் நடைபெற்ற வண்ணம் உள்ளன. இதில், ஒன்பது மெய்நிகர் மற்றும் நேருக்கு நேர் உரையாடல்களை பல அமைப்புகளுடன் இணைந்து நடத்தியது 'ரீச்' (Reach). சிங்கப்பூர் இந்திய மேம்பாட்டுச் சங்கம் மற்றும் சீக்கிய இளையர் சங்கத்துடன் இணைந்து நடத்தப்பட்ட நேற்றைய உரையாடல், குறிப்பாக சிங்கப்பூர் இந்திய சமூகத்தில் பெண்களின் வளர்ச்சி பற்றிய கலந்துரையாடலாக அமைந்தது. இதில் இந்திய சமூகத்தை சேர்ந்து 50 பேர் கலந்துகொண்டு தங்களது எண்ணங்களையும் கருத்துகளையும் வெளிப்படையாக பகிர்ந்துகொண்டனர்.
அமைச்சர் குமாரி இந்திராணி ராஜாவும், அமைச்சர் விக்ரம் நாயரும் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு பங்கேற்பாளர்களின் கருத்துகளை செவிமடுத்தார்.
தனது பாட்டி காலத்தில் பெண்கள் அதிகம் கல்வி பெறவோ வேலை செய்யவோ அனுமதிக்கப்படவில்லை என்பதை நினைவு கூர்ந்த அமைச்சர் திரு விக்ரம் நாயர், இந்நிலை மாறி சமூகம் பெண்கள் சார்ந்த விஷயங்களில் முன்னேறியிருந்தாலும், இன்னும் நிறைய முன்னேற்றத்தை அடைய வேண்டும் என்னும் கருத்தை முன்வைத்தார்.
"சிங்கப்பூர் அரசாங்கம், பெண்களை ஆதரிப்பதற்கும் அவர்களது வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும் உறுதிபூண்டுள்ளது. நமது தற்போதைய சட்டம் மற்றும் கொள்கைகளின் அடிப்படைகள் வலுவாக இருந்தாலும் , சிங்கப்பூர் பெண்
களின் கனவுகளையும் தேவை
களையும் புரிந்துகொள்வதற்கும், நமது சட்டங்களும் கொள்கைகளும் காலப்போக்கில் பெண்
களின் தேவைகளுக்கேற்ப மறுபரிசீலனை செய்வதற்கும் தயாராக இருக்கிறோம்.
ஆண்கள், தமது வாழ்க்கையில் உள்ள பெண்களின் வாழ்க்கைக்கு ஆதரவளிப்பதில் முக்கிய பங்கு வகிக்கவேண்டும். உதாரணத்திற்கு கணவர்களாக வீட்டில் அதிக வீட்டுப் பொறுப்புகளை ஏற்க முன்வரவேண்டும்.
"இது நமது குடும்பங்களிலும் நமது மகள்களின் வாழ்க்கையிலும் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும் மனைவியின் தனிப்பட்ட மற்றும் பணியிட கனவுகளைஅவர்கள் எட்ட ஆதரவாக இருக்கும்." என்றார் அமைச்சர் விக்ரம் நாயர்.
கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்டுள்ள நல்ல பரிந்துரைகள் மற்றும் யோசனைகள் எதுவும் வீணாகாது என்று உறுதியளித்தார் அமைச்சர் குமாரி இந்திராணி.
"ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான சமத்துவம் கடைப்பிடிக்கப்படும் இடமாக சிங்கப்பூர் உருவெடுக்க வேண்டும். பெண்கள் தொடர்ந்து போராடும் நிலை மாறவேண்டும். இன்னும் அந்நிலையை நாம் அடையவில்லை.
"ஆனால் அதை அடைவதற்கு நாம் தொடர்ந்து பல முயற்சிகளை எடுக்கவேண்டும். இதற்கான பொறுப்பு பெண்களுக்கு மட்டும் அல்ல ஆண்களுக்கும் உண்டு. ஒருவருக்கொருவர் பரஸ்பர மரியாதை, புரிதல் மேம்படவேண்டும். ஆண்களும் பெண்களும் ஒரே மாதிரியானவர்கள் என்று நாம் நினைப்பது தவறு.
"நாம் ஒரே மாதிரியாக இல்லை. ஆனால், நமக்கு வெவ்வேறு பலங்கள் உள்ளன. அதனால் மதிப்பில் சமத்துவம், சமமான வாய்ப்புகள் கொடுக்கப்படவேண்டும். இதற்கு தனி நபரிலிருந்து அரசாங்கம் வரை மாற்றத்தை செயல்படுத்தவேண்டும்," என்று அமைச்சர் இந்திராணி ராஜா தெரிவித்தார்.

