இம்மாதம் 12ஆம் தேதியிலிருந்து வர்த்தக ரீதியாகவும் கூட்டங்கள், மாநாடுகள், கண்காட்சிகள் ஆகிய நிகழ்ச்சிகளிலும் 'புஃபே' விருந்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு வர்த்தகர்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
ஆனால் கிருமிப் பரவலைத் தடுக்க மிகக் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டியிருப்பதால் அதனால் ஏற்படும் கூடுதல் செலவுகள் குறித்து வர்த்தகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்பு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த கூடுதல் மனித வளமும் சாதனங்களும் தேவைப்
படுகின்றன.
சுய சேவைக்குத் தொடர்ந்து அனுமதி இல்லை. புஃபே விருந்துக்கு வைக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்கள் பிளாஸ்டிக் உறையால் மூடப்பட்டிருக்க வேண்டும். உணவுக்கான வரிசையில் நிற்பவர்களுக்கு முகக்கவசம் அணிந்திருக்கும் ஊழியர்கள் மட்டுமே உணவைப் பரிமாறலாம்.
வர்த்த ரீதியாகவும் கூட்டங்கள், மாநாடுகள், கண்காட்சிகள் ஆகிய நிகழ்ச்சிகளின்போதும் புஃபே முறை விருந்து வழங்கப்பட்டால் சிங்கப்பூர் கேட்டரிங் நிபுணர்கள் சங்கத்தின் வழிகாட்டி நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்ய பாதுகாப்பு நிர்வாகப் பிரதிநிதி அங்கு இருக்க வேண்டும்.
"புஃபே உணவின் விலை நிறுவனத்துக்கு நிறுவனம் வேறுபடுகிறது. சில இடங்களில் $10 வெள்ளிக்கு புஃபே வழங்கப்படுகிறது. கூடுதல் செலவு ஏற்படுவதால் இத்தகைய விலை கட்டுப்படியாகாது. இதனால் புஃபே விலையை உயர்த்தியாக வேண்டும்.
"கூடுதல் ஊழியர்களை நியமிக்க விலை உயர்த்தப்படுவதாக வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிக்க வேண்டும்," என்று சிங்கப்பூர் கேட்டரிங் நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் வின்சென்ட் பாங் கூறினார்.
தற்போது நடப்பில் உள்ள வழிகாட்டி நெறிமுறைகள் உணவு, பானத் துறைக்கும் நிறுவனங்களுக்கும் மாநாடுகள் மற்றும் கண்காட்சிகளுக்கும் மட்டுமே பொருந்தும் என்பதால் கூடுதல் மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. திருமணங்கள், இறுதிச் சடங்குகள், சமூக நிகழ்வுகள் ஆகியவற்றில் புஃபே முறைக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை.
இத்தகைய நிகழ்வுகளில் பென்ட்டோ பொட்டலங்களில் உணவு பரிமாறப்படும் முறை தொடரும் என்று திரு பாங் குறிப்பிட்டார்.
ஒன்றுகூடல்கள், பெரிய அளவிலான நிகழ்வுகள் ஆகியவற்றுக்கான கட்டுப்பாடுகள் தொடர்ந்து நடப்பில் இருப்பதால் புஃபே முறை மீது பொதுமக்களுக்கு இன்னும் முழுமையான நம்பிக்கை வரவில்லை என்று அவர் தெரிவித்தார்.
"சமூக இடைவெளி விதிமுறை நடைமுறையில் இருக்கும் வரை முன்பு இருந்ததுபோல புஃபே முறை இருக்காது. கேட்டரிங் சேவையை மறுசீரமைப்பது குறித்து ஆராய வேண்டும். சுய சேவை புஃபேயை இனி அவ்வளவாக நம்பியிருக்க முடியாது," என்று திரு பாங் தெரிவித்தார்.

