சிங்கப்பூரின் மூத்த எழுத்தாளர் 93 வயதான திரு வை. சுதர்மனுக்கு இவ்வாண்டு தமிழவேள் விருது வழங்கி சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் சிறப்பித்துள்ளது.
கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக எழுத்துப் பணியில் ஈடுபட்டுள்ள திரு சுதர்மன் 15 நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.
வரலாற்று நினைவுகள் (ஆசிய விடுதலைப் போராட்டத்தில் ஒரு தமிழ்ப் புரட்சியாளன்) என்ற நூலுக்கு 1991ஆம் ஆண்டில் தமிழக அரசின் பாராட்டுச் சான்றிதழை திரு சுதர்மன் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் உலகப் போரிலும் சிங்கப்பூர் விடுதலை பெற்ற காலத்திலும் இளையராக இருந்தார் அவர். இந்தியா, மலாயா, சிங்கப்பூர் ஆகிய மூன்று நாட்டு விடுதலைப் போராட்டங்களில் பங்கு கொண்டதன் அடையாளமாகவே தன் பெயருடன் ‘விடுதலைக்கவி’ எனும் அடையாளக் குறியீட்டை வைத்துக் கொண்டதாக திரு சுதர்மன் கூறினார்.
தமிழ் முரசு நிறுவனர் தமிழவேள் கோ.சாரங்கபாணியின் நினைவாக வழங்கப்படும்
‘தமிழவேள்’ விருதைப் பெற்ற சுதர்மன், திரு சாரங்கபாணியுடனான தமது நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.
சிங்கப்பூரின் மூத்த படைப்
பாளர்கள், தமிழுக்குச் சேவையாற்றியவர்கள் ஆகியோருக்கு வழங்கப்படும் இந்த விருதைப் பெறும் 26வது படைப்பாளர் இவர்.
“இந்த இக்கட்டான காலகட்டத்திலும் பல அமைப்புகள் கைகோத்து இந்நாட்டில் தமிழை வாழவைக்க தமிழ்மொழி விழாவைக் கொண்டாடுவது சிறப்பானது,” என்றார் திரு சுதர்மன்.
தமிழ்மொழி விழாவின் அங்கமாக நேற்று முன்தினம் நடைபெற்ற முத்தமிழ் விழா, கொவிட்-19 நோய்ப் பரவல் சூழலால் இரண்டாவது முறையாக மெய்நிகர் தளத்தில் நடைபெற்றது.
விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் தலைவருமான திரு விக்ரம் நாயர், “நம்முடைய மொழி சிங்கப்பூரில் வாழும் மொழியாக இருப்பதற்கு எழுத்தாளர்கள் மிகவும் முக்கியம்,” என்றார்.
வரலாற்றுச் சம்பவங்களைப் பற்றி திரு சுதர்மன் எழுதியுள்ளவை அடுத்த தலைமுறையினருக்கு நல்ல வாசிப்பாக இருக்கும் என்றார் திரு விக்ரம்.
கொவிட் காலத்தில் போட்டிகள், நிகழ்ச்சிகள் என அனைத்தையும் வித்தியாசமாகச் செய்ய வேண்டிய நிலை இருந்தாலும் ஏற்பாட்டாளர்கள் நல்ல முயற்சி எடுத்துள்ளார்கள் என்றார் திரு விக்ரம்.
பாலர் பள்ளி முதல் பல்கலைக்
கழக நிலைகளில் பயிலும் மாணவர்கள் உட்பட பொதுமக்களும் நிகழ்வில் கலந்துகொண்டனர். 704 மாணவர்களும் 25 பொதுமக்களும் விழாவில் நடத்தப்பட்ட போட்டிகளில் ஈடுபட்டனர்.
மாறுவேடம், கதை சொல்லுதல், பேச்சு, மொழிபெயர்ப்பு, சிறுகதை ஆகிய பல வகையான போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு நிகழ்ச்சியில் விருதுகள் வழங்கப்பட்டன. நாட்டிய நடனம், பாடல் போன்ற மற்ற பல கலை அம்சங்கள் நிகழ்ச்சிக்கு மெருகூட்டின.
தமிழகத்தின் முன்னாள் காவல்துறை கண்காணிப்பாளரான திரு அ.கலியமூர்த்தி நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றினார்.
‘கரையற்ற கல்வியும், வரையற்ற மொழியும்’ என்ற தலைப்பில் பேசிய கலியமூர்த்தி புத்தகங்கள் படிப்பது மனித வாழ்வை உயர்த்தவல்லது என்றும் ஏழ்மையிலிருந்து விடுபட கல்வி உதவும் என்றும் வலியுறுத்தினார்.
“நிறைய பட்டங்களைப் பெற்று தம் பெயரை அலங்கரிப்பதைவிட நல்ல புத்தகங்களை எழுதி தன்னுடைய மனதை அலங்கரிப்பவர்களே மேன்மையானவர்கள் என்று நான் எந்த மேடையிலும் அடித்து சொல்வேன். பட்டப் படிப்பை முடித்து புத்தகங்களை மூலையில் எறிந்துவிட்டு படிப்பு முடிந்ததாக முனைப்பீர்களே ஆனால் வாழ்க்கையில் தோற்றுப்போவீர்கள். தொடர்ந்து முன்னேற முடியாது,” என்றார் 35 ஆண்டு காலம் காவல் துறையில் பணியாற்றிய திரு கலியமூர்த்தி.
முழு நிகழ்ச்சியின் பதிவு: https://youtu.be/Ig0kQDzg2ck