'இப்போது வாங்கி, பிறகு பணம் செலுத்துக' எனப்படும் 'பிஎன்பிஎல்' திட்டம் பயனீட்டாளர்கள் அதிகம் செலவிடுவதற்குக் காரணமாக அமைவதால் அந்தத் திட்டத்தைக் கட்டுப்படுத்துவது தேவையா என்பது குறித்த மறு ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாக சிங்கப்பூரிலும் மற்ற நாடுகளிலும் இணையம் வழியாகப் பொருள்கள் வாங்குவது பிரபலமடைந்து வருவதால் அது இளம் வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகிறது.
சிங்கப்பூர் வாடிக்கையாளர்
களுக்கு அதன் தொடர்பிலான பயன்களும் அபாயங்களும் அதிகம் என சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் பேச்சாளர் குறிப்பிட்டார்.
அதனால், அத்தகைய திட்டங்களுக்கு ஏற்ற விதிமுறை அணுகுமுறைகளைப் பற்றி மறு ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
இத்திட்டம் குறித்து வர்த்தகங்களிடம் தரவுகளைப் பெறவும் ஆணையம் முயற்சி எடுத்துள்ளது.
வர்த்தகர்களுக்கும் பயனீட்டாளர்களுக்கும் புதிய கட்டண முறைகள் வழங்கும் பலன்களை மதிப்பிடுவதுடன் அவற்றால் பயனீட்டாளர்கள் அளவுக்கு அதிகமாகக் கடன் வாங்கி அவற்றைத் திருப்பிச் செலுத்த சிரமப்படும் நிலை ஏற்படக்கூடாது என்பதும் மறு ஆய்வின்போது கவனத்தில் கொள்ளப்படும். விதிமுறை சட்டப்பணி தேவைப்பட்டால், பயனீட்டாளர்களின் கடன் அபாயங்களைக் குறைக்கும் விதத்தில் அனைத்து 'பிஎன்பிஎல்' திட்டங்களுக்கும் செயல்படுத்தும் விதத்தில் அத்தகைய விதிமுறைகளை சிங்கப்பூர் நாணய ஆணையம் செயல்படுத்தும் என்றும் அதன் பேச்சாளர் குறிப்பிட்டார்.
'பிஎன்பிஎல்' திட்டத்தின்கீழ் பொருள்களை வாங்கலாமா என்று முடிவெடுக்க கீழ்க்கண்ட ஆலோசனைகளையும் சிங்கப்பூர் நாணய ஆணையம் வழங்கியுள்ளது.
1. 'பிஎன்பிஎல்' திட்டம் இருக்கிறது என்பதற்காக அத்தியாவசியமற்ற பொருள்களை சக்திக்கு மீறி செலவழித்து வாங்கக்கூடாது. அவ்வாறு செய்தால் அத்தியாவசியப் பொருள்களுக்கு போதிய அளவுக்கு செலவழிக்க இயலாமல் போகும்.
இத்தகைய திட்டங்களைப் பயன்படுத்தி பொருள்கள் வாங்கும்போது உரிய காலத்துக்குள் திருப்பிச் செலுத்தமுடியாமல் போனால் கூடுதல் கட்டணங்களைச் செலுத்த வேண்டியிருக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
2. கட்டணத்தைப் பிறகு செலுத்தலாம் என்பது பொருள்களைக் குறைந்த விலைக்கு வாங்குவது என்று பொருளாகாது.
'பிஎன்பிஎல்' திட்டத்தின் மூலம் பொருள்கள் வாங்கியவர்களில் 30 விழுக்காட்டினர் நிதிப் பிரச்சினைகளை எதிர்நோக்கியதாகத் தெரிவித்துள்ளனர்.
3. விற்பனைச் சலுகை அறிவிக்கப்பட்டிருந்தால், உடனடியாகப் பொருள்கள் வாங்கவேண்டும் என்று அவசரப்பட வேண்டாம். கிட்டத்தட்ட எல்லா சமயங்களிலும் ஏதாவது விற்பனைச் சலுகைகள் இருக்கவே செய்யும். பல இடங்களில் கிடைக்கக்கூடிய பொருள்களாக இருந்தால், இணையத்தில் தேடி, விலை குறைவான இடத்தில் வாங்கலாம்.
4. அளவுக்கு அதிகமாகப் பொருள்கள் வாங்க வேண்டாம். சில வேளைகளில், வாங்கும் பொருள்கள் தரமானவையாக இல்லாமலும் இருக்கலாம். கூடுதலாகப் பொருள்கள் வாங்கினால் அதிக தள்ளுபடி என்பதைப் பார்த்து ஏமாற வேண்டாம். இறுதியில் கூடுதலாக செலவு செய்ய நேரிடலாம்.

