இந்து இளங்கோவன்
சிங்கப்பூரில் திருமணம் செய்துகொள்வோரின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு சரிந்துகொண்டே வருகிறது.
சிங்கப்பூரர்கள் கல்வி கற்பதற்கும் ஒரு நிலையான வேலையைத் தேர்வுசெய்வதற்கும் அதிக ஆண்டுகள் செலவழிப்பதால், அதிகமானோரின் திருமண வாழ்க்கை பின்னுக்குத் தள்ளப்படுகிறது என்பது சமூகவியலாளர்களின் கருத்து.
பல பொறுப்புகளை சமநிலைப்
படுத்தும் முயற்சியில், அவர்கள் வாழ்க்கையின் முக்கிய அம்சங்களாக கருதப்படும் தொழில், நிதி, பெற்றோர் போன்றவற்றிற்கு அதிக முன்னுரிமை அளிக்கிறார்கள்.
காலம் தள்ளிப் போகப் போக பலருக்குத் திருமணம் என்பது கேள்விக்குறியாக மாறுகிறது.
அதிலும் சிங்கப்பூரில் சிறுபான்மையினருக்கு ஏற்ற துணையைக் கண்டறிவது என்பது தனிச்
சவாலாக இருந்து வருகிறது.
துணையைக் கண்டு பிடிக்க உதவும் 'dating apps' என்னும் செயலிகளைப் பயன்படுத்துவதில் கூட நிறைய தயக்கம் நிலவுகிறது.
இந்த வார முரசு பிஸ்ட்ரோவில், இந்தச் சவால்களை எதிர்கொண்டு புதுமணத் தம்பதிகளாக 6 மாதத்திற்கு முன் தங்களது வாழ்க்கையைத் துவங்கிய கௌத்தமன் ஹரிதாஸ், 32, ஜெயசுதா சமுத்திரன், 30, தங்களது கருத்துக்களைப்
பகிர்ந்துகொண்டுள்ளனர்.
கடந்த ஆண்டு கொவிட்-19 கிருமிப் பரவலின் நெருக்கடிக்கு மத்தியில் இவர்களது திருமணப் பதிவு நடந்தேறியது.
தங்களது வாழ்க்கையில் அதிர்ஷ்டம் எட்டிப் பார்த்து சரியான நேரத்தில் சரியான சமயத்தில் தாம் இருவரும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததாக கூறிய இந்தத் தம்பதியினர், ஏற்ற துணையைக் கண்டறிய பலரையும் சந்தித்து உரையாடிப் பழகுவது அவசியம் என்னும் கருத்தை முன் வைத்தனர்.
பல மொழி, கலாசார நடவடிக்கைகளில், நிகழ்ச்சிகளில் பங்குபெற்று தம்மைப் போன்றவர்களை சந்தித்து சமூக வலையை விரிவு படுத்துவது நல்லது என்னும் ஆலோசையையும் வழங்கினர்.
"பல்கலைக்கழகப் படிப்பை முடிக்கும் வரை பெற்றோர் படிப்பில் மட்டும் கவனத்தைச் செலுத்துவதை முன்னிலைப்படுத்துகின்றனர். காதல், துணையைத் தேர்வு செய்வது போன்றதைப் பெரும்பாலான பெற்றோர் ஆதரிப்பதில்லை.
"இதனால் பலருக்கு துணையைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போகிறது. பல்கலைக்கழகப் படிப்பு முடிந்ததும் வேலைச் சுமை பலரையும் விழுங்கி விடுகிறது.
இதற்கிடையே துணையைத் தேட முயற்சிகள் எடுத்தாலும் அதுவும் கடினமான ஒன்றாக இருக்கிறது.
"டேட்டிங் செயலிகள், நண்பர்கள் இவர்களைத் தவிர்த்து இதற்கு மற்றொரு தீர்வும் உள்ளது. 'ஆண்ட்டி நெட்ஒர்க்' என்று அதை அழைப்பார்கள்.
நமது சமூகத்தில் உள்ள மூத்த பெண்மணிகள் ஒருவர் மற்றொருவருடன் உரையாடி, தங்களுக்குத் தெரிந்த திருமணத்திற்குத் தயாரான இளைஞர்களைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டு அவர்களுக்கு ஒரு துணையைத் தேட உதவுவதைத்தான் 'ஆண்ட்டி நெட்ஒர்க்' என்றழைப்பர்," என்று நகைச்சுவை கலந்த தனது எண்ணங்களை முன்வைத்தார்
ஜெயசுதா.
துணையைத் தேடி தேர்வு செய்வது மட்டுமல்ல, திருமணமான பின்பு புதுமணத் தம்பதியினர்
சந்திக்கக்கூடிய பிரச்சினைகளைப் பற்றியும் வெளிப்படையாகப் பேசிய தம்பதிகள், ஒருவரை ஒருவர்
புரிந்துகொள்வதைத் தவிர்த்து இரு குடும்பத்தாரும் ஒத்துப்போகவேண்டும் என்றும் அதில் பலர் சவால்களை சந்திக்கக்கூடும் என்றனர்.
திருமணமாவதற்கு முன்பு சிங்கப்பூரில் தம்பதிகள் தங்களது தேவைக்கேற்ப கட்டப்படும் வீடுகளைப் பெறுவது ஒரு முக்கியமான படியாக கருதப்படுகிறது.
ஆனால் கூட்டுக் குடும்பத்தை விரும்பும் கௌத்தமன், ஜெயசுதா, இதுபோன்றவற்றிக்கு நேர வரைமுறை அவசியம் இல்லை என்று கூறினர்.
இந்த உரையாடலைக் காண இந்த 'கியூஆர்' குறியீட்டை வருடவும்:
முரசு பிஸ்ட்ரோ பாகம் 4