ப. பாலசுப்பிரமணியம்
இளையர்களிடம் தமிழ் இலக்கிய கூறுகளைக் கொண்டு சேர்த்திடும் வேளையில் அது அவர்களுக்குப் பிடித்த பாணியில் அமைய வேண்டும்.
இதனை மனதில் கொண்டு பிரம்மாஸ்திரா இசைக்குழு இவ்வாண்டின் தமிழ்மொழி விழாவில் 'குரலும் குறளும்' எனும் நிகழ்ச்சியுடன் இளையர்களோடு இணைந்தது.
வளர்தமிழ் இயக்கத்தின் ஆதரவில் இரண்டாவது முறையாக இதுபோன்ற இசைப் படைப்பு தமிழ் மொழி விழாவில் இடம்பெறுகிறது.
8 பாகங்களாக பிரிக்கப்பட்ட இந்த இசை காணொளி
நிகழ்ச்சியில், நெறியாளர் அஷ்வினி செல்வராஜ் திருக்குறள் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதற்கு எளிய முறையில் புரிந்துகொள்ளும் விதமாக சுருக்கமாக விளக்கம் தருகிறார்.
அதனைத் தொடர்ந்து, அந்த திருக்குறளுக்குத் தொடர்புடைய திரைப்பாடலை பிரம்மாஸ்திரா இசைக்குழுவினர் படைக்கின்றனர்.
உள்ளூர் பாடகர்களான விஷ்ணு பாலாஜி, மீனாட்சி ஜோதிஷ் திரைப்பாடலுக்குக் குரல் கொடுக்க, பின்னணியில் புல்லாங்குழலில் நிரஞ்சன் பாண்டியன் இசைக்குழு 'ஜேஸ்' இசையில் திரைப்பாடலுக்குப் புத்துயிர் அளிக்கின்றனர்.
கடந்த 10ஆம் தேதி 'ஃபேஸ்புக்', 'யூடியூப்' உள்ளிட்ட ஊடகத் தளங்களில் கு.தர்ஷன் காணொளி இயக்கத்தில் பதிவேற்றமானது.
எதிர்காலத்தில் பாரதியார் கவிதைகள் மையம்கொண்ட பாடல்கள் அல்லது தமிழ் இலக்கியத்துடன் மையப்படுத்திய இசை நிகழ்ச்சியை நடத்த விரும்புகிறது பிரம்மாஸ்திரா இசைக் குழு.