கொவிட்-19 கிருமித்தொற்று முடிவுகளை விரைவில் காட்டும் தன்மை
கொவிட்-19 கிருமித்தொற்றை உடனே உறுதி செய்யக்கூடிய சுவாச பரிசோதனை சாதனங்கள், கூடிய விரைவில் இங்கு பெருமளவில் நடைமுறைப்படுத்தப்படலாம். பாதுகாப்பான பயண ஏற்பாடுகளுக்கும் பெருமளவில் நடைபெறும் நிகழ்வுகளின் பரிசோதனை செயல்முறைக்கும் இது வசதியாக அமைந்திடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சாதனங்களைத் தயாரிக்கும் பணிகள் தொடர்பில் சிங்கப்பூர் மருத்துவத் தொழில்நுட்ப நிறுவனமான 'சில்வர் ஃபேக்டரி டெக்னாலஜி', தொற்று நோய்களுக்கான தேசிய நிலையம் (என்சிஐடி), சாங்கி விமான நிலையம் மற்றும் 'செர்டிஸ்' பாதுகாவல் நிலையம் ஆகியவற்றுடன் இணைந்து செயல்படுவதாகக் கூறப்படுகிறது.
'பிசிஆர்' பரிசோதனை முடிவுகளில் காணப்படும் துல்லியம், 'TracieX' என்ற சாதனத்தின் மூலம் ஓரளவுக்குப் பெற முடிவதாகக் கூறப்படுகிறது.
ஆனால் 'பிசிஆர்' சோதனையைப் போல் அல்லாமல் கிருமித்தொற்றை உறுதிசெய்ய, சாதனத்திற்கு இரண்டே நிமிடங்கள் போதும் என்று கூறப்படுகிறது.
ஒரு முறை பயன்படுத்தப்படக்கூடிய இந்தச் சாதனத்தின் உணர்திறன் ஆற்றல், 95 விழுக்காட்டுக்கு மேல் என்று கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன், பிசிஆர் பரிசோதனையை விட சாதனத்தின் விலை குறைவு என்றும் தெரிவிக்கப்பட்டது. ஒரு சாதனத்தின் விலை 20 அமெரிக்க டாலர் (S$26) ஆகும்.
இதற்கிடையே, என்சிஐடி, சாங்கி விமான நிலையம் முனையம் ஒன்று, செர்டிஸ் ஆகியவற்றில் முன்னோட்டக் கட்டம் தொடங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதுவரை, 400க்கும் மேற்பட்டவர்கள் சாதனம் வழி பரிசோதனை செய்துகொண்டதாக சில்வர் ஃபேக்டரி தெரிவித்தது.
மார்ச் மாதம் சாங்கியில் தொடங்கப்பட்ட முன்னோட்டத்தின்போது, ஒரு சில பயணிகளிடம் விருப்ப அடிப்படையில் தங்களின் சுவாச மாதிரி தருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
அவ்வகையில் சுவாச பரிசோதனை சாதனங்கள் மேலும் வசதியாக அமைந்திருப்பதாகவும் பயணிகளுக்கான விமான நிலைய அனுபவத்தை சுமுகமாக்க உதவுவதாகவும் சாங்கி விமான நிலையக் குழுமத்தைச் சேர்ந்த திரு அல்பெர்ட் லிம் கூறினார்.
இதனால் விமானப் பயணங்களை மீண்டும் திறப்பதற்கான திட்டங்களுக்கும் ஓர் உந்துதல் கிடைக்கும் என்றார் அவர்.
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழத்தின் கீழ் உருவாகிய சில்வர் ஃபேக்டரி, இவ்வாண்டு ஜூன் முதல் குறைந்தது 200,000 சுவாச பரிசோதனை சாதனங்களை ஒரு மாதத்தில் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது.
படிப்படியாக இந்த எண்ணிக்கையை மாதத்திற்கு இரண்டு மில்லியன் சாதனங்களாக்குவதை இலக்காகக் கொண்டுள்ளது.

