அரசாங்க நிதியுடன் சிறிய, நடுத்தர நிறுவனம் ஒன்று கணினிகளுக்கான 'திடநிலை இயக்கி' ஒன்றை உருவாக்கியுள்ளது.
கணினித் தரவுகளைப் பெற முயலும் இணைய ஊடுருவிகளைக் கண்டறிந்து, அவர்களைத் தடுத்து நிறுத்தும் ஓர் இறுதிக்கட்டத் தற்காப்புச் சாதனம் செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் வழங்குவதாகக் கூறப்படுகிறது.
மேலும், இயக்கியைச் சேதப்படுத்த முயற்சி செய்தால், ஒரு வினாடிக்குள் அதில் உள்ள தரவுகள் அனைத்தும் தானாக அழிந்துபோகும் தன்மையும் அதற்கு உள்ளதாக சாதனத்தை உருவாக்கிய 'ஃபிளெக்ஸன்' நேற்று கூறியது.
சாதனத்தின் மாதிரி வடிவத்தைப் பயன்படுத்திப் பார்ப்பதற்காக அரசாங்கமும் விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
உள்ளூர், வெளிநாட்டு ராணுவ, தற்காப்பு நிறுவனங்களும் சாதனப் பயன்பாட்டில் ஆர்வம் காட்டுவதாக நிறுவம் தெரிவித்தது.
மருத்துவம், விமானப் போக்குவரத்து, அச்சிடுதல் ஆகிய துறைகளைச் சார்ந்த அனைத்துலக நிறுவனங்களும் இச்சாதனத்தைப் பயன்படுத்துவதில் ஈடுபாடு காட்டுவதாகக் கூறப்படுகிறது.
சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு அமைப்பிடமிருந்து பெறப்பட்ட நிதியிலிருந்து நிறுவனம் சாதனத்தை உருவாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
தேசிய அளவில் இணையப் பாதுகாப்பு மற்றும் உத்திபூர்வத் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் புத்தாக்க இணையப் பாதுகாப்புத் தீர்வுகளை உருவாக்குவதை இந்நிதித் திட்டம் இலக்காகக் கொண்டுள்ளது.
மேலும், வர்த்தகப் பயன்பாடுகளும் இருக்கும் நிலையில் தீர்வுகளாக அவை அமைய வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சாதனம் இயங்கும் முறை
சாதனத்தில் இருக்கும் தரவுகளை ஒருவர் பயன்படுத்த முயற்சி செய்யும்போது, ஏதேனும் அசாதாரண போக்கு தெரிகிறதா என்பது முதலில் சோதிக்கப்படும்.
சேதப்படுத்தும் தன்மையுடைய 'மெல்வேர்' மென்பொருளுடன் நபரின் பயன்பாட்டு முறை ஒப்பிடப்படும்.
அவ்வாறு சந்தேகத்தை எழுப்பும் வகையில் நபரது பயன்பாடு அமைந்தால் மேற்கொண்டு அவர் பயன்படுத்துவதைத் தடுக்க, சாதனம் தனக்கே காப்பு இட்டுக்கொள்ளும். சாதனத்தின் பயனாளருக்கு இது தொடர்பில் மின்னஞ்சல் போன்ற வழிகளில் எச்சரிக்கை அனுப்பப்படும்.
மிரட்டல் அளிக்கும் ஊடுருவல் நீங்கிய பின்னர், பயனாளர் தனது சாதனத்தில் உள்ள காப்பை நீக்கிவிட்டு தொடர்ந்து பயன்படுத்தலாம் என்று கூறப்பட்டது.
சாதனத்தின் பயன்
இதுபோன்ற இணைய ஊடுருவல் நடக்கும்போது, ஒரு நிறுவனத்தின் தரவுகள் அனைத்தையும் பயன்படுத்த முடியாத வண்ணம் ஊடுருவி தடுத்துவிடலாம். நிறுவனம் கேட்கும் தொகையைக் கொடுத்தால் மட்டுமே ஊடுருவி அந்தத் தடுப்பை அகற்றுவதாக மிரட்டலாம்.
இத்தகைய சூழல்களைச் சாதனம் தவிர்க்க உதவும் என்று கூறப்படுகிறது.
இணைய ஊடுருவிகள் பயன்படுத்தும் உத்திகளையும் சாதனம் அறிந்துகொண்டு இனிவரக்கூடிய இணைய மிரட்டல்களுக்கு எதிராகப் பாதுகாப்பு அளித்திடும் என்று கூறப்படுகிறது.
ஊடுருவிகள் வேறு பெயரில் இயங்கினாலும், அவர்களது அணுகுமுறையைச் சாதனம் கண்டறிந்துவிடும் என்று கூறப்படுகிறது.