கஞ்சா, போதைமிகு அபின் உட்பட 40 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருளை மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு பறிமுதல் செய்துள்ளது.
பறிமுதல் செய்யப்பட்டுள்ள போதைப்பொருள் ஒரு வாரத்துக்கு 12,400 போதைப் புழங்கிகளுக்குப் போதுமானவை. அவற்றின் மதிப்பு $2.3 மில்லியனுக்கும் அதிகம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமையன்று பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளில் பெரும்பாலானவை சுவா சூ காங் அவென்யூ 4ல் 22 வயது மலேசிய ஆடவர் வசிக்கும் வீட்டில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. 23.6 கிலோ கஞ்சா, 16.5 கிலோ போதைமிகு அபின், 2 கிலோ ஐஸ் வகை போதைப்பொருள், ஏறத்தாழ 110 எக்ஸ்டசி மாத்திரைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்ததாக நேற்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு கூறியது.
1996ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆக அதிகமான கஞ்சாவும் 2001ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆக அதிகமான போதைமிகு அபினும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
1996ஆம் ஆண்டில் 33.4 கிலோ கஞ்சாவும் 2001ஆம் ஆண்டில் 34.8 கிலோ போதைமிகு அபினும் பறிமுதல் செய்யப்பட்டது. ஆக அண்மையில் நடத்தப்பட்ட அதிரடி நடவடிக்கையின்போது சுவா சூ காங் அவென்யூ 4ல் உள்ள குடியிருப்புக் கட்டடத்தின் தரைத்தளத்தில் சந்தேக நபரை அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடமிருந்த நான்கு கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சந்தேக நபரின் படுக்கையறையில் இருந்த எட்டு போதைமிகு அபின் பொட்டலங்கள், இரண்டு ஐஸ் பொட்டலங்கள், எக்ஸ்டசி மாத்திரை ஆகியவை அதிகாரி
களிடம் சிக்கின.
வீட்டில் இருந்த மற்றோர் அறையில் பைகளில் வைக்கப்பட்டிருந்த 27 போதைமிகு அபின் பொட்டலங்களும் 20 கஞ்சா பொட்டலங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் செய்தியாளர் கூட்டத்தின்போது செய்தியாளர்களிடம் காட்டப்பட்டன.
பிரபல ஜப்பானிய கேலிச்சத்திரமான ஹலோ கிட்டி வடிவில் இருந்த இளஞ்சிவப்பு நிறத்திலான எக்ஸ்டசி மாத்திரைகளும் அடங்கும்.
"சிங்கப்பூர் போதைப்பொருள் உற்பத்தி செய்யும் நாடல்ல. பெருமளவில் போதைப்பொருளை உற்பத்தி செய்யும் வட்டாரங்கள்
சிங்கப்பூரைச் சுற்றி இருக்கின்றன. இதனால் சிங்கப்பூருக்குள் அதிக அளவு போதைப்பொருள் கடத்தப்படும் அபாயம் உள்ளது," என்று மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் உளவியல் பிரிவு இயக்கு நரான ஏரன் டாங் கூறினார்.
எனவே சிங்கப்பூர் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றார் அவர்.

