அலெக்சாண்ட்ரா மருத்துவமனையில் தொல்பொருள் ஆய்வு

அலெக்சாண்ட்ரா மருத்துவமனையில் தொல்பொருள் ஆய்வு

1 mins read
2f0e0f9a-8034-43ef-989a-438c0da3531f
மருத்துவமனை வளாகத்தின் மேற்குப் பகுதியில் 3,600 சதுரமீட்டர் பரப்பளவிலும் இந்த ஆய்வு மேற்கொள்ளபப்டுகிறது. படம்: ஐஎஸ்இஏஎஸ்-யூசோஃப் இஷாக் கழகம் -

அலெக்சாண்ட்ரா மருத்துவமனையில் தொல்பொருள் ஆய்வை தேசிய மரபுடைமைக் கழகமும் மருத்துவமனையின் தற்போதைய நிர்வாகமும் இணைந்து மேற்கொண்டுள்ளன.

கடந்த 1942ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி, காயமடைந்த போர் வீரர்கள் மருத்துவமனை ஊழியர்கள் ஆகியோரை குழுக்களாகச் சேர்த்து கைகளைக் கட்டி, அம்மருத்துவமனையின் பின்புறமிருந்த ஒரு பகுதிக்கு அழைத்துச் சென்ற ஜப்பானிய படைவீரர்கள் அவர்களைக் கூட்டுக்கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

அந்த மருத்துவமனையில் உள்ள கிட்டத்தட்ட 6,000 சதுர மீட்டர் பரப்பளவில்தான் இந்தப் படுகொலை நிகழ்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. நோயாளிகள் உட்பட 200 பேர் இரு நாள்களில் ஜப்பானியர்களிடம் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அந்த மருத்துவமனை வளாகத்தின் மேற்குப் பகுதியில் 3,600 சதுரமீட்டர் பரப்பளவிலும் இந்த ஆய்வு மேற்கொள்ளபப்டுகிறது. மருத்துவமனை மறுசீரமைப்பு செய்யப்படுவதற்கு முன்பாக இந்த ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படும். ஏற்கெனவே அறிவித்திருந்தபடி, 2030ஆம் ஆண்டுக்குள் ஒருங்கிணைக்கப்பட்ட சுகாதார வளாகமாக அந்த மருத்துவமனை மறுசீரமைக்கப்பட உள்ளது. மருத்துவமனை வளாகத்தின் வரலாற்றுச் சிறப்பைக் கருத்தில் கொண்டு ஆய்வு நடத்தப்படுவதாக (இரண்டாம் உலகப்போரைக் குறிப்பிடாமல்), அலெக்சாண்ட்ரா மருத்துவமனையும் தேசிய மரபுடைமைக் கழகமும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தன.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்த ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆய்வில் கிடைத்த தகவல்களை பகுப்பாய்வு செய்து, தேவை ஏற்பட்டால் கூடுதல் விசாரணைகள் மேற்கொள்ளப்படும். ஐஎஸ்இஏஎஸ்-யூசோஃப் இஷாக் கழகத்தின் தொல்பொருள் ஆய்வுக் குழு இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது. நிலத்தை அகழாமல் ஆய்வு செய்யும் முறைகள் இந்தப் பணியில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.