இர்ஷாத் முஹம்மது
சிங்கப்பூரில் தமிழ் மொழி அதிகாரத்துவ மொழிகளில் ஒன்றாக வீற்றிருக்கக் காரணமாக இருந்தவர் என்று போற்றப்படும் தமிழவேள் கோ. சாரங்கபாணியின் 118வது பிறந்தநாளான நேற்று அவரது தொண்டர் ஒருவர் லிட்டில் இந்தியாவில் கொண்டாடினார். எண் 143 டன்லப் ஸ்திரீட்டில் அமைந்துள்ள 'விஆர்777' தமிழ்ப் புத்தகக் கடையில் காலை 11 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை அங்கு வந்த வாடிக்கையாளர்கள், அவ்வழியே நடந்த பொதுமக்கள், அக்கம்பக்கக் கடைக்காரர்கள், ஊழியர்கள் போன்றோருக்கு மிட்டாய்களை வழங்கி மகிழ்ச்சியைப் பகிர்ந்தார் தமிழவேள் நற்பணி மன்றத்தின் தலைவர் திரு
ப.தியாகராஜன், 80.
நாவிற்குச் சுவையாக இனிப்பை வழங்கியதுடன், ஒவ்வொருவருக்கும் தமிழவேளைப் பற்றிய சுருக்கமான அறிமுகத்தையும் அவர் கொடுத்தார்.
"வாங்க, இன்றைக்கு தமிழவேள் சாரங்கபாணியின் பிறந்தநாள். தமிழ் முரசை ஆரம்பித்தவர். இன்றைக்கு இங்கு நாம் தமிழ் பேசி தமிழில் எல்லா சேவைகளையும் பெறுகிறோம். இதுக்கெல்லாம் காரணமானவர் அவர்," என்று திரு தியாகராஜன் ஒவ்வொருவரிடமும் கூறினார்.
"தமிழ்ப் புத்தகக் கடைகள் பல இடங்களில் முன்பு இருக்கும். இப்போதெல்லாம் குறைந்துவிட்டது. தற்போது இந்தப் பெரிய கடையில் சஞ்சிகைகள், புத்தகங்கள் விற்கப்படுகின்றன என்பதை அறிந்து மகிழ்ந்தேன்," என்றார் திரு தியாகராஜன்.
தம் இளம் வயது முதல் சமூகச் சேவையில் நாட்டம் கொண்ட திரு தியாகராஜன், அதற்கு தமிழவேள் கோ. சாரங்கபாணியே காரணம் என்றார்.
"தமிழுக்கும் தமிழருக்கும் அரும்பாடுபட்டவர் தமிழவேள். நான் சமூகத்திற்காகத் தொண்டு செய்யும் ஆர்வமே அவரைப் பார்த்து வந்ததுதான்," என்றார் அவர்.
தமிழவேளை நேரடியாகக் கண்டு, அவரது முயற்சிகளுக்கு தொண்டராகப் பணியாற்றி, அவருக்கு உதவி பல செய்துள்ள திரு தியாகராஜன், தமிழவேள் கோ. சாரங்கபாணியின் பிறந்தநாள் ஆண்டுதோறும் கொண்டாடப்பட வேண்டிய ஒன்று என்றார்.
"அவரது வாழ்க்கை வரலாறு நவீன சிங்கப்பூரில் தமிழ்மொழியின் வரலாற்றுடன் இணைந்த ஒன்று. அதை அடுத்தத் தலைமுறையினர் அறிந்திடவேண்டும்," என்று அவர் சொன்னார்.
தமிழ் முரசு உட்பட பல பத்திரிகைகளை நிறுவியது, தமிழர் பிரதிநிதித்துவ சபை, தமிழர் சீர்திருத்தச் சங்கம் ஆகிய அமைப்புகளை நிறுவியது, தமிழ்க் கல்வித் துறையை அன்றைய மலாயா பல்கலைக்கழகத்தில் அமைக்க சேவை புரிந்தது, இந்தியர்களை சிங்கப்பூர் குடியுரிமைப் பெற ஊக்குவித்தது, கல்வியிலும் வேலையிலும் இந்தியர்கள் முன்னேற வேண்டும் என்று உந்துதல் அளித்தது என்று தமிழவேள் ஆற்றிய பங்கு அளப்பரியவை என்று தெரிவித்தார் திரு தியாகராஜன்.
தமிழவேள் கோ. சாரங்கபாணி 1903ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20ஆம் தேதி தமிழகத்தில் பிறந்து 1924ஆம் ஆண்டு வாழ்வாதாரம் தேடி சிங்கப்பூர் வந்தார். தமது சீர்திருத்தக் கொள்கைகளாலும் சமூக அக்கறையாலும் அவர் பல வழிகளில் சிங்கப்பூர் இந்தியச் சமூகத்திற்குச் சேவையாற்றியுள்ளார்.
தமது 71ஆம் வயதில் 1974ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16ஆம் தேதி அவர் மறைந்தார்.
"ஆண்டுதோறும் அவரது நினைவு நாளையும் பிறந்தநாளையும் கடந்த பல ஆண்டுகளாக தமிழவேள் நற்பணி மன்றத்தின் சார்பில் கொண்டாடி வருகிறோம். இவ்வாண்டு கொவிட் சூழலால் முந்தைய ஆண்டுகள் போல பெரிய நிகழ்ச்சியையோ நடவடிக்கையையோ செய்ய முடியவில்லை என்றாலும் மிட்டாய் பகிர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வை என்னால் முடிந்த அளவு செய்யவேண்டும் என்று நினைத்தேன்," என்றார் அவர்.
நாராயண மிஷன் தாதிமை இல்லத்தின் குடியிருப்பாளர்களுக்கு உணவு வழங்கி கொண்டாடுவது, இலக்கிய நிகழ்ச்சிகள், சமூக சேவை நடவடிக்கைகள் போன்றவை தமிழவேள் நற்பணி மன்றம் கடந்த ஆண்டுகளில் தமிழவேள் பிறந்தநாளையும் நினைவுநாளையும் ஒட்டி நடத்திய நிகழ்ச்சிகள்.
"எனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. சிகிச்சைக்குப் பின் ஓய்வாக இருக்கவேண்டும் என்றாலும் இன்று கொஞ்சம் நேரமாவது இதைச் செய்தால்தான் எனக்கு மனநிறைவு," என்றார் அவர்.
"எனக்கு 80 வயதாகிவிட்டது. தமிழவேளுடன் பணியாற்றிய தளபதிகளின் தலைமுறை மறைந்துவரும் நிலையில், அவரது புகழைப் பாடவும் அவரது பணியை அறியவும் சமூகத்தினர் முன்வரவேண்டும்," என்றார் அவர்.