சிங்கப்பூரில் உள்ள 10 தாதிமை இல்லங்களுக்கு நிதி திரட்டும் அதே வேளையில் அன்னையர் தினத்தைக் கொண்டாடுவதற்காக, அடுத்த மாதம் 8ஆம் தேதி இணையம்வழி நடைபெறவிருக்கும் அறக்கொடை நிகழ்ச்சி ஒன்றில் மக்கள் செயல் கட்சியின் (மசெக) மகளிர் அணியைச் சேர்ந்த சில உறுப்பினர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் பாடவுள்ளவர்களில் மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோவும் பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜாவும் அடங்குவர் என்று செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் போ லி சான் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார். அமைச்சர் டியோ, மசெக மகளிர் அணித் தலைவராகவும் அமைச்சர் இந்திராணி அதன் துணைத் தலைவராகவும் உள்ளனர்.
வசந்தம் கலைஞர் ஷேரன் ஷோபனா வாசுதேவன் உள்ளிட்ட உள்ளூர் கலைஞர்கள் சிலரும் அமைச்சர்களுடன் சேர்ந்து நிகழ்ச்சியில் கலந்துகொள்வர்.
மசெகவின் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் யூடியூப் ஒளிவழியில் மே 8ஆம் தேதி பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரை நேரடியாக இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்.
இந்த அறக்கொடை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யும் திருமதி போ, நிகழ்ச்சியில் $200,000 நன்கொடை இலக்கை எட்ட மசெக மகளிர் அணி அதன் சமூகப் பங்காளிகள் மற்றும் கட்சித் தொண்டர்களுடன் சேர்ந்து பணியாற்றும் என்று கூறினார். மூத்த குடிமக்களுக்கான 'தோங் டெக்' இல்லம் இந்நிகழ்ச்சியின் பயனாளர்களில் அடங்கும்.
இந்த ஆண்டு சிங்கப்பூர் மகளிரைக் கொண்டாடும் ஆண்டாக அறிவிக்கப்பட்டிருப்பதைச் சுட்டிய திருமதி போ, சமுதாயத்திற்கு மகளிரின் பங்களிப்புக்கு நன்றிகூற இந்த அறக்கொடை நிகழ்ச்சி நோக்கம் கொண்டிருப்பதாகச் சொன்னார்.
மகளிரைப் பாதிக்கும் விவகாரங்களைத் தான் மறுஆய்வு செய்ய இருப்பதாக அரசாங்கம் கடந்த ஆண்டு அறிவித்திருந்தது.
அந்த மறுஆய்வின் ஒரு முக்கிய அங்கமாக 'சிங்கப்பூர் மகளிரின் மேம்பாடு பற்றிய உரையாடல்கள்' என்று அழைக்கப்படும் கலந்துரையாடல் தொடர் இடம்பெறுகிறது. அத்தொடர் கடந்த ஆண்டு செப்டம்பரில் தொடங்கப்பட்டது.

