உயர்ந்து வரும் கடல் நீர்மட்டம், மனிதர்கள் வாழும் இடங்களைப் பாதிப்பதோடு நிறுத்திவிடுவதில்லை. சதுப்புநிலங்களையும் கடற்பாசி பகுதிகளையும் அது பாதிக்கிறது.
இந்தப் பகுதிகள் பாதிப்படைந்தால், பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் அவற்றின் ஆற்றலும் பாதிப்படையக்கூடும் என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் இயற்கை சார்ந்த பருவநிலை தீர்வுகளுக்கான நிலையத்தைச் சேர்ந்த டாக்டர் ஸெங் யிவென் கூறியுள்ளார்.
பருவநிலை மாற்றம் குறித்த ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழின் இணையக் கருத்தரங்கில் நேற்று பேசிய அவர், சதுப்பிநிலங்களும் கடற்பாசி பகுதிகளும் இயற்கையிலேயே சூழலுக்கேற்ப தங்களை மாற்றிக்கொள்ளும் ஆற்றல் கொண்டவை. கடல்நீர் மட்டம் உயரும்போது தீவின் உள்பகுதிக்குள் அவற்றால் நகர முடியும்.
எனினும், அத்தகைய வசிப்பிடங்களுக்குப் பின்னால் உள்ள நிலத்தில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படும்போது, அந்த வசிப்பிடங்கள் தீவின் உள்பகுதிக்குள் நகருவதில் தடை ஏற்படுத்தப்படுகிறது.
உயர்ந்துவரும் கடல்நீர் மட்டத்தைச் சதுப்புநிலங்களால் சமாளிக்க முடியுமா என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழின் பருவநிலை மாற்றப் பிரிவின் ஆசிரியர் டேவிட் ஃபொகார்ட்டி கேட்ட கேள்விக்கு டாக்டர் ஸெங் இவ்வாறு பதில் அளித்தார்.
மோசமான வானிலையில் இருந்து கரையோரப் பகுதிகளைப் பாதுகாக்கும் ஆற்றலைச் சதுப்புநிலங்கள் கொண்டுள்ளன. எனவே பருவநிலை மாற்றம் ஏற்படுத்தும் பாதிப்புகளை மட்டுப்படுத்துவதில் சதுப்புநிலங்களுக்கு முக்கிய பங்கு உண்டு என்று டாக்டர் ஸெங் விவரித்தார்.
மீன்பிடிக்கும் இடங்களையும் சதுப்புநிலங்கள் பாதுகாக்கின்றன. இதனால் உணவு உற்பத்தியின் மீதும் மனிதர்களின் வாழ்வின் மீதும் தாக்கம் ஏற்படுத்தப்படுகிறது என்றார் அவர்.
எனவே பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை இப்போதே தொடங்க வேண்டும் என்று கருத்தரங்கில் நிபுணர்கள் வலியுறுத்தினர்.

