தொடக்கப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், தொடக்கக் கல்லூரிகள், மில்லேனியா கல்விக் கழகம் ஆகியவற்றில் பயிலும் ஏறத்தாழ 130,000 மாணவர்கள் டிரேஸ்டுகெதர் சாதனங்களை தங்கள் பள்ளிகளில் பெற்றுக்கொள்ள விண்ணப்பம் செய்தனர்.
டிரேஸ்டுகெதர் சாதனத்தை இன்னும் பெற்றுக்கொள்ளாத மாணவர்கள் அடுத்த மாத இறுதிக்குள் அவற்றைத் தங்கள் பள்ளியில் பெற விண்ணப்பிக்கலாம் என்று கடந்த மாதம் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், டிரேஸ்டுகெதர் சாதனங்களைப் பள்ளியில் பெற விண்ணப்பம் செய்திருந்த மாணவர்கள் அனைவரும் அதற்கான காலக்கெடுவுக்குள் சாதனங்களைப் பெற்றுக்கொண்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் கல்வி அமைச்சு கூறியது.
டிரேஸ்டுகெதர் திட்டத்தில் பங்கேற்கும் 90 விழுக்காட்டுக்கும் மேற்பட்ட சிங்கப்பூரர்கள் மற்றும் சிங்கப்பூர் நிரந்தரவாசிகளில் இந்த மாணவர்களும் அடங்குவர்.
சிங்கப்பூரெங்கும் உள்ள கடைத்தொகுதிகள், உணவகங்கள் போன்ற இடங்களுக்குச் செல்பவர்களின் தனிப்பட்ட விவரங்களைப் பதிவு செய்ய டிரேஸ்டுகெதர் சாதனத்தை மட்டுமே பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி டிரேஸ்டுகெதர் சாதனம் இல்லாத, டிரேஸ்டுகெதர் செயலியை இன்னும் பதிவிறக்கம் செய்யாத மாணவர்களுக்கு பள்ளிகளில் அனுமதி மறுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வகுப்பில் இருக்கும்போது வெளிப்புற நடவடிக்கைகளின்போது கைபேசியைப் பயன்படுத்த முடியாததால் டிரேஸ்டுகெதர் சாதனத்தைப் பள்ளிக்குக் கொண்டு செல்லும்படி மாணவர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர்.

