சிங்கப்பூரின் முதல் பிரதமரான அமரர் லீ குவான் இயூவின் உயில்களைத் தவறாகக் கையாண்டதன் தொடர்பிலான புகார்களின் பேரில் திருவாட்டி குவா கிம் லி (படம்) ஒழுங்கு நடவடிக்கையை எதிர்கொள்கிறார். திரு லீ குடும்பத்தாரிடையேயான சச்சரவுகளின் அண்மைய நிலைப்பாடு இது.
திருவாட்டி குவாவின் நடத்தை பற்றி திரு லீ சியன் யாங், டாக்டர் லீ வெய் லிங் ஆகிய இருவரும் பதிவு செய்த இரண்டு கூடுதல் புகார்களை முறையாக விசாரிக்க ஒரு தீர்ப்பாயம் அமைக்கப்பட வேண்டும் என உயர் நீதிமன்றம் நேற்று ஆணையிட்டது. இவ்விரு வரும் அந்த சொத்து தொடர்பான விருப்ப ஆவணத்தை நிறைவேற்ற உரிமை கொண்டவர்கள்.
திரு லீ குவான் இயூவின் இளைய இரு பிள்ளைகளும் தாங்கள் திருவாட்டி குவாவுக்கு எதிராகப் பதிவு செய்த நான்கு புகார்களில் ஒன்றை மட்டும் விசாரிக்க எடுத்த வழக்கறிஞர்கள் சங்கத்தின் முடிவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ததையொட்டி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மறைந்த திரு லீயின் முந்தைய உயில்களை அழிப்பது தொடர்பிலான ஆணைகளை திருவாட்டி குவா பின்பற்றத் தவறினாரா, மறைந்த திரு லீ குவான் இயூவுடனான தமது உரையாடல் பதிவுகளைப் பிரதமர் லீ சியன் லூங்குக்கு அனுப்பியதன் மூலம் ரகசியத்தன்மையின் கடமைகளை மீறினாரா, விருப்ப ஆணையை நிறைவேற்றுபவர்களுக்குத் தவறான தகவல்களை வழங்கினாரா எனும் மூன்று புகார்களை விசாரிக்குமாறு அந்தத் தீர்ப்பாயம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
திரு லீ குவான் இயூவிடமிருந்து பெற்ற ஆணைகள் மற்றும் அறிவுரைகள் தொடர்பிலான சமகால குறிப்புகள் மற்றும் பதிவுகளை முறையாக வைத்துக்கொள்ள திருவாட்டி குவா தவறிவிட்டார் எனும் நான்காவது புகாரை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
திரு லீ சியன் யாங்கும் டாக்டர் லீயும் திருவாட்டி குவாவின் நடத்தை பற்றி வழக்கறிஞர்கள் சங்கத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி புகார் செய்தனர். சலுகை மற்றும் ரகசியத்தன்மை மீறலின் தொடர்பிலான புகாரை மட்டும் விசாரிக்க முடிவு எடுப்பதற்கு முன்பாக அந்தப் புகார்களை விசாரணைக் குழுவுக்கு வழக்கறிஞர்கள் சங்கம் பரிந்துரைத்தது.
மற்ற இரண்டு புகார்களுக்கு எதிராகவும் ஒழுங்கு நடவடிக்கையைத் தொடங்குமாறு வழக்கறிஞர்கள் சங்கத்தை நீதிபதி வேலரி தியன் கேட்டுக்கொண்டார்.
லீ சகோதர, சகோதரிகளின் உறவினரும் லீ அண்ட் லீ சட்ட நிறுவனத்தின் நிர்வாகப் பங்காளியுமான திருவாட்டி குவா, கடந்த 2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி முதல் 2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 2ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் மறைந்த திரு லீ குவான் இயூ ஆறு உயில்களை வரைய உதவினார். இறுதி உயிலைத் தயாரிப்பதில் திருவாட்டி குவா ஈடுபடுத்தப்படவில்லை. அதில் கையொப்பம் இடப்பட்ட பிறகு அவருக்கு அது பற்றித் தெரிவிக்கப்பட்டது.
விசாரணைக் குழு தனது இரண்டு அறிக்கைகளில் இரு வேறு முடிவுகளை எடுத்துள்ளதால், முறையான விசாரணையைத் தீர்ப்பாயத்தின் மூலம் நடத்துவது அவசியமாகிறது என வழக்கறிஞர்கள் சங்கம் முடிவு செய்ததாகவும் நீதிபதி தியன் குறிப்பிட்டார்.

