சிங்கப்பூருக்கும் ஹாங்காங்கிற்கும் இடையிலான இருவழிப் பயண ஏற்பாடு மீண்டும் தொடங்கும் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று போக்குவரத்து அமைச்சு நேற்று தெரிவித்தது.
இருவழிப் பயணம் தொடர்பான அறிவிப்பு நேற்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அறிவிப்பு செய்ய எடுக்கப்பட்டிருந்த முடிவை இருநாடுகளும் கைவிட்டன.
அறிவிப்பை சிங்கப்பூர் ரத்து செய்ததாக புளூம்பெர்க் அறிக்கை தெரிவித்தது.
இருவழிப் பயண ஏற்பாடு தொடர்பாக சிங்கப்பூரும் ஹாங்காங்கும் மிக அணுக்கமாக கலந்தாலோசித்து வந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் போக்குரவரத்து அமைச்சின்
செய்தித்தொடர்பாளர் கூறினார்.
சிங்கப்பூருக்கும் ஹாங்காங்கிற்கும் இடையிலான இருவழிப் பயண ஏற்பாடு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்க இருந்தது.
"இருவழிப் பயண ஏற்பாட்டை மீண்டும் தொடங்கும் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஆனால் நாங்கள் தயாரானதும் தேதியை முடிவு செய்வோம். கூடிய விரைவில் முடிவு எடுக்கப்படும் என நம்புகிறோம்," என்று செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
ஹாங்காங்கில் கொவிட்-19 பாதிப்பு மோசமடைந்ததைத் தொடர்ந்து, சிங்கப்பூர்-ஹாங்காங் இருவழிப் பயண ஏற்பாடு இவ்வாண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ஹாங்காங்கில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் அண்மையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் மூலம் இருவழிப் பயண ஏற்பாடு கூடிய விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இருவழிப் பயண ஏற்பாட்டை மீண்டும் தொடங்க கூடிய விரைவில் இணக்கம் காணப்படும் என இம்மாதம் 13ஆம் தேதியன்று ஹாங்காங் தலைமை நிர்வாகி கேரி லாம் தெரிவித்திருந்தார்.
பயணிகளைத் தனிமைப்படுத்தும் முறை இல்லாது சிங்கப்பூருக்கும் ஹாங்காங்கிற்கும் இடையிலான இருவழிப் பயண ஏற்பாட்டை மீண்டும் தொடங்குவது தொடர்பான விவரங்கள் உறுதி செய்யப்படுவதாக இம்மாதம் 14ஆம் தேதியன்று போக்குவரத்து அமைச்சு ஓங் யி காங் தெரிவித்தார்.
மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் சிங்கப்பூரிலும் ஹாங்காங்கில் கொரோனாவால் மிகப் பெரிய அளவிலான பாதிப்பு ஏற்படவில்லை
கொவிட்-19 கிருமித்தொற்று தலைதூக்கியதிலிருந்து ஹாங்காங்கில் 11,704 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.
கொரோனா காரணமாக சிங்கப்பூரில் 30 பேர் மாண்டுவிட்டனர்.
ஆனால் இரு நாடுகளும் சிறிய நாடுகள் என்பதால் ஒவ்வொரு குடியிருப்பு வட்டாரங்களிலும் பலர் வசிக்கும் சூழல் உள்ளது.
சிலருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டாலும் அது மற்றவர்களுக்கு மிக எளிதில் பரவும் சாத்தியம் அதிகம் உள்ளது.
எனவே, எல்லைகளை மீண்டும் திறக்கும் திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.
இதே போன்ற பிரச்சினைகளை மற்ற நாடுகளும் எதிர்கொள்கின்றன.
பல மாதங்கள் காத்திருப்புக்குப் பிறகு ஆஸ்திரேலியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையிலான இருவழிப் பயண ஏற்பாடு கடந்த திங்கட்கிழமையன்று தொடங்கியது.
ஆனால் மறுநாளே ஆக்லந்து அனைத்துலக விமான நிலையத்தைச் சேர்ந்த ஊழியருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டது.

