சிங்கப்பூர் அமைச்சரவை மே 15 முதல் மாற்றம் காண்கிறது. புதிய அமைச்சரவையில் பல அமைச்சர்களும் அரசியல் பதவிகளை வகிப்போரும் புதிய அல்லது கூடுதல் பொறுப்புகளை ஏற்க உள்ளதாக நேற்று பிரதமர் லீ சியன் லூங் அறிவித்தார்.
திருவாட்டி ஜோசஃபின் டியோ தொடர்பு, தகவல் அமைச்சராகப் பொறுப்பேற்கிறார்.
'அறிவார்ந்த நகர்' செயல்திட்டத்திற்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சராகவும் 'சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு முகவை'க்குப் பொறுப்பு அமைச்சராகவும் இவர் பணியாற்றுவார்.
இந்தப் பொறுப்புகளை இவர் அமைச்சர்கள் முறையே டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், திரு ஈஸ்வரன் ஆகியோரிடம் இருந்து ஏற்கிறார்.
திரு எட்வின் டோங் மக்கள் கழகத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்படுகிறார். இந்தப் பொறுப்பை திரு சான் சுன் சிங்கிடம் இருந்து அவர் ஏற்கிறார்.
திரு ஓங் யி காங் புதிய சுகாதார அமைச்சராக செயலாற்றுவார். மூப்படையும் பிரச்சினைகளுக்கும் பொறுப்பேற்பார்.
திருவாட்டி சிம் ஆன், தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சராகத் தொடர்வார். தொடர்பு, தகவல் மூத்த துணை அமைச்சர் பதவியைக் கைவிடுவார். வெளியுறவு மூத்த துணை அமைச்சராக இவர் நியமிக்கப்படுகிறார்.
திரு சீ ஹொங் டாட், போக்குவரத்து மூத்த துணை அமைச்சராக தொடர்வார். என்டியுசியில் பொறுப்பேற்கிறார்.
டாக்டர் கோ போ கூன் மனிதவள மூத்த துணை அமைச்சராக நியமிக்கப்படுகிறார். இவர் சுகாதார மூத்த துணை அமைச்சராகத் தொடர்ந்து பணியாற்றுவார். டாக்டர் கோ என்டியுசி துணைத் தலைமைச் செயலாளர் பதவியைக் கைவிட்டுவிட்டு முழு நேர அரசாங்கத்துக்குத் திரும்புவார்.
திரு டான் கியாட் ஹாவ் தொடர்பு, தகவல் துணை அமைச்சராகப் பொறுப்பு ஏற்பார். தேசிய வளர்ச்சி துணை அமைச்சராகத் தொடர்ந்து பதவி வகிப்பார். என்றாலும் பிரதமர் அலுவலகத்தின் துணை அமைச்சர் என்ற பதவியை இவர் கைவிடுவார்.
திருவாட்டி ரஹாயு மக்ஸாம் சுகாதார அமைச்சின் நாடாளுமன்றச் செயலாளராக சேவையாற்று வார். தொடர்பு, தகவல் அமைச்சுக்கான நாடாளுமன்றச் செயலாளர் என்ற கூடுதல் பொறுப்பையும் அவர் ஏற்பார்.

