அமைச்சரவை மாற்றத்தின் காரணமாக நான்காம் தலைமுறைத் தலைவர்கள் தங்களுடைய புதிய பதவிகளில் ஒன்றாகச் சேர்ந்து செயல்பட்டு ஒரே குழுவாகத் தங்கள் பிணைப்பைப் பலப்படுத்த முடியும் என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்து உள்ளார்.
பெரும்பாலான நான்காம் தலைமுறைத் தலைவர்கள் பலதரப்பட்ட துறைகளில் ஏற்கெனவே அனுபவங்களைத் திரட்டி இருப்பதாகக் குறிப்பிட்டார் பிரதமர்.
புதிய மாற்றங்கள் காரணமாக அவர்கள் புதிய அனுபவங்களையும் ஈடுபாடுகளையும் பெற வழி ஏற்படும் என்றும் பிரதமர் திரு லீ தெரிவித்தார்.
கொவிட்-19 சூழ்நிலை இப்போது நிலைப்பட்டு இருந்தாலும் நாம் இன்னமும் பொதுச் சுகாதார, பொருளியல் நெருக்கடிகளை எதிர்நோக்குகிறோம் என்பதால் விரைவாக அவர்கள் செயல்பட வேண்டி இருக்கிறது என்று நேற்று நடந்த மெய்நிகர் செய்தியாளர்கள் கூட்டத்தில் பிரதமர் திரு லீ கூறினார்.
"அமைச்சரவை ஒரே குழுவாகச் சேர்ந்து செயல்பட வேண்டி இருக்கிறது. அமைச்சர்கள் ஒரு குழுவின் அங்கமாகப் பாடுபடுகிறார்கள். அவர்கள் பங்கை ஆற்றுகிறார்கள் என்பது மக்களுக்குத் தெரிய வேண்டும்.
"அதேநேரத்தில் ஒரு பிரச்சினை எழும்போது அதை முழுமையாகக் கையாளுவதற்குத் தலைவர்கள் தயாராக இருக்க வேண்டும்," என்று பிரதமர் திரு லீ செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறினார்.

