வளங்களை அணுகுவதற்கான வசதிகள் இல்லாத சிறிய நாடாக இருந்தாலும் புத்தாக்கத்தின் வழியாக நாட்டின் பருவநிலை தொடர்பான இலக்குகளை அடைய சிங்கப்பூர் முயற்சி எடுக்கும் என பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பு விடுத்த பருவநிலை தொடர்பான தலைவர்கள்
மெய்நிகர் மாநாட்டின் இரண்டாவது நாளான நேற்று அவர் உரையாடினார். கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்கவும் பருவநிலை மாற்றங்களுக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளவும் தொழில்நுட்பத்தை சிங்கப்பூர் பயன்படுத்துவதாகப் பிரதமர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரின் புதுப்பிக்கப்படக்கூடிய ஆற்றல் வளங்கள் எல்லைக்குட்பட்டவை என்றாலும் 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டின் சூரிய சக்தி மின்னாற்றல் உற்பத்தியை நான்கு மடங்காக்கத் திட்டமிடப்பட்டிருப்
பதைக் குறிப்பிட்டார் பிரதமர். உலகின் ஆகப் பெரிய மிதக்கும் சூரிய சக்தி மின்னாற்றல் உற்பத்தித் திட்டம் ஆண்டுதோறும் 33,000 டன் கரியமில வாயு வெளியேற்றத்தைச் சரிக்கட்டும் என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
தெங்கெ நீர்த்தேக்கத்தில் மிதக்கும் சூரிய சக்தி மின்கலம் பயன்பாட்டுக்கு வரும்போது சாலை
களிலிருந்து 7,000 கார்களின் பயன்பாட்டை நீக்குவதற்கு ஈடான
கரியமில வாயு வெளியேற்றம் தடுக்கப்படும் என்று முன்பு பிரதமர் குறிப்பிட்டிருந்தார்.
நெரிசல் மிகுந்த நகரச் சூழலில் வெப்பநிலை உயர்வின் தாக்கம் குறித்தும் சிங்கப்பூர் அக்கறை கொண்டுள்ளதாக பிரதமர் லீ குறிப்பிட்டார்.
"இதனைக் குறைப்பதற்காக பருவகாலத்துக்கு ஏற்ற நகர வடிவமைப்பை கணினியைப் பயன்படுத்தி வடிவமைக்கிறோம், கட்டடங்
களுக்கு சிறப்பான குளிர்ச்சியூட்டும் சாயம் பூசி பரிசோதிக்கிறோம், ஒரு மில்லியனுக்கும் அதிகமான மரங்களை நடுகிறோம்," என்றும் அவர் குறிப்பிட்டார். கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்கும் நோக்கில் நாடுகள் அதிக முயற்சிகள் மேற்கொள்ள ஊக்குவிக்கும் விதத்தில் இரு தினங்கள் நடைபெற்ற மெய்நிகர் மாநாட்டில் பங்கேற்ற 40 உலகத் தலைவர்களுள் திரு லீயும் ஒருவர்.
'பருவநிலை தொடர்பான புத்தாக்கத்தைக் கட்டவிழ்ப்பது' எனும் பொருள்படும் தலைப்பில் கூட்டத்தில் பேசிய திரு லீ, சிங்கப்பூர் சிறிய நாடாக இருந்தபோதும் அனைத்துலக பருவநிலை செயல்திட்டங்களுக்கான தனது பங்கைத் தொடர்ந்து ஆற்றியது என்றார்.
தாம் அங்கம் வகிக்கும் 'பருவநிலை மாற்றத்துக்கான ஐக்கிய நாடுகள் பணிச்சட்ட' அமைப்பில் கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைப்பது தொடர்பான நீண்டகால உத்தியைச் சமர்ப்பித்த முதல் 20 நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று.
2030ஆம் ஆண்டின் உச்சபட்ச கரியமில வாயு வெளியேற்றத்தை 2050ஆம் ஆண்டுக்குள் பாதி
யாகக் குறைக்க சிங்கப்பூர் இலக்கு கொண்டுள்ளது. இந்த நூற்றாண்டின் பிற்பாதியில் கூடிய விரைவில் கரியமில வாயு வெளியேற்றத்தை முற்றிலும் இல்லாமல் செய்வதையும் கவனத்தில் கொண்டுள்ளது சிங்கப்பூர். சிங்கப்பூரில் முன்பு அறிவிக்கப்பட்ட நீடித்து நிலைத்திருக்கும் வளர்ச்சிக்கான சிங்கப்பூர் பசுமைத் திட்டம் 2030 பற்றியும் திரு லீ குறிப்பிட்டார்.
ஒரு பொருளியல் மையமாக சிங்கப்பூர் எவ்வாறு அனைத்துலக கரியமில வாயு வெளியேற்றக் குறைப்புக்கு உதவ முடியும் என்பதை சிங்கப்பூரின் பசுமை முதலீட்டுத் திட்டம் உட்பட பல திட்டங்களைக் குறிப்பிட்டுப் பிரதமர் விளக்கினார். மாநாட்டை ஏற்பாடு செய்த அதிபர் பைடனுக்கு நன்றி தெரிவித்த பிரதமர், நீடித்த நிலைத்தன்மையுடைய எதிர்காலத்தை உருவாக்க அமெரிக்கா, மற்ற நாடு
களுடன் இணைந்து சிங்கப்பூர் செயல்படும் என்றும் அவர் கூறினார்.

