வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) மறுவிற்பனைச் சந்தை இவ்வாண்டின் முதல் காலாண்டில் வலுவாக மேம்பட்டு வருகிறது. கொவிட்-19 தடுப்பூசி போடப்பட்டு வருவதால் ஏற்பட்டுள்ள கருத்து காரணமாக மறுவிற்பனை வீட்டு விலைகள் தொடர்ந்து நான்கு காலாண்டு
களாக உயர்ந்து வருகிறது. குறைந்த எண்ணிக்கையிலான வீடுகள் கைமாறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இவ்வாண்டின் முதல் மூன்று மாதங்களில் மறுவிற்பனை விலைக் குறியீடு 142.2 புள்ளியாக உயர்ந்தது. கடந்த ஆண்டின் நான்காவது காலாண்டைவிட 3% அதிகரித்துள்ளதை வீவக நேற்று வெளியிட்ட தரவுகள் தெரிவித்தன. ஆண்டு அடிப்படையில் விலைகள் 8.1% உயர்ந்தன.
அனைத்துலக அளவில் கொவிட்-19 தடுப்பூசிகள் போடப்பட்டதை அடுத்து உலகப் பொருளியல் மேம்படும் என்ற நோக்கில் உலக அளவில் சொத்து விலைகள் உயர்ந்தன. அதேபோல சிங்கப்பூரின் வீவக மறுவிற்பனைச் சந்தையும் மேம்பாடு கண்டது.
26 வீவக நகரங்களில் 22ல் மறுவிற்பனை வீட்டு விலைகள் அதிகரித்தன. மத்திய வட்டாரத்தில் ஆக அதிகமாக நான்கறை வீட்டின் மறுவிற்பனை விலை $910,000 ஆக இருந்தது.
கேன்டோன்மண்ட் ரோட்டில் இருக்கும் தி பின்னக்கிள்@டக்ஸ்டனில் உயர்மாடி ஐந்தறை வீடுகள் அண்மைய ஆண்டுகளில் $1 மில்லியனுக்கும் அதிகமான விலைக்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
உட்லண்ட்ஸில் ஆகக் குறைவாக நான்கறை வீட்டின் மறுவிற்பனை விலை $380,000 ஆகவும் செம்பவாங்கில் நான்கறை வீட்டின் மறுவிற்பனை விலை $399,000 ஆகவும் இருந்தது.
இருப்பினும், அதிகரிக்கும் மறுவிற்பனை வீட்டு விலை மற்றும் மதிப்பீட்டுக்கு அதிகமான ரொக்கம் (சிஓவி) ஆகியவற்றுக்கிடையே, கடந்த காலாண்டில் ஒட்டுமொத்தமாக விற்பனையான மறுவிற்பனை வீடுகளின் எண்ணிக்கை சற்றுக் குறைந்தது.
கடந்த 2020ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த காலாண்டில் விற்பனை எண்ணிக்கை 0.8% குறைந்து 7,581 ஆனது.
கடந்த காலாண்டில் வீட்டு வாடகையும் அதிகரித்தது.
தேவைக்கேற்ப கட்டித் தரப்படும் (பிடிஓ) 3,800 வீடுகளை புக்கிட் மேரா, கேலாங், தெங்கா, உட்லண்ட்ஸ் ஆகிய பகுதிகளில் அடுத்த மாதம் வீவக விற்பனைக்கு விட உள்ளாது. ஹவ்காங், ஜூரோங் ஈஸ்ட், காலாங்/வாம்போ, குவீன்ஸ்
டவுன், தெம்பனிஸ் வட்டாரங்களில் மேலும் 4,900 பிடிஓ வீடுகள் ஆகஸ்ட் மாதத்தில் விற்பனைக்கு வரும்.
எதிர்பார்ப்பை விஞ்சி அதிகரித்த தனியார் வீட்டு விலைகள்
எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே தனியார் வீட்டு விலைகள் இவ்வாண்டின் முதல் காலாண்டில் அதிகரித்தன. தனியார் வீட்டு விலைகள் அதற்கு முந்தைய காலாண்டைவிட 2.9% அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அது 3.3% அதிகரித்துள்ளது. இந்தத் தகவல்களை நகர மறுசீரமைப்பு ஆணையம் நேற்று வெளியிட்டது.
பொருளியல் மீட்சி, குறைவான வட்டி விகிதம், தடுப்பூசி போடப்
படுவதால் தோன்றியுள்ள எண்ணம் ஆகியவை இந்த விலை உயர்வுக்குக் காரணம் எனக் கருதப்படுகிறது.
தொடர்ந்து நான்கு காலாண்டு களாக தனியார் விலைகள் அதிகரித்திருப்பதும் ஒரு காலாண்டுக்குள் அதிவேகமாக வீட்டு விலைகள் அதிகரித்திருப்பதும் இந்தக் காலாண்டில் நிகழ்ந்திருக்கின்றன.
கடந்த 2018ஆம் ஆண்டு இரண்டாம் காலாண்டில் தனியார் வீட்டு விலைகள் 3.4 விழுக்காடு உயர்ந்தன. அந்த ஆண்டின் ஜூலை மாதத்தில் சொத்துவிலைத் தணிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
விலைகள் இதேபோல தொடர்ந்து அதிகரித்து, அரசாங்கத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி முன்னுரைப்பான 4 முதல் 6 விழுக்காட்டைவிட அதிகரித்தால், கூடுதல் விலைத் தணிப்பு நடவடிக்கைகள் அறி
முகப்படுத்தப்படக்கூடும் என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
இவ்வாண்டின் முதல் காலாண்டில் 3,493 புதிய வீடுகள் விற்பனை யாகின. காலாண்டு அடிப்
படையில் இது 34% அதிகம். 4,519 தனியார் வீடுகள் இவ்வாண்டின் முதல் காலாண்டில் விற்பனை
யாகின. தரைவீடுகளின் விலை இந்தக் காலாண்டில் 6.7%, அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளின் விலை 2.5% அதிகரித்தன.