சிங்கப்பூரின் மூலாதார பணவீக்கம் மார்ச் மாதத்திலும் தொடர்ந்து மேம்பட்டது. சில்லறை விற்பனை, மின்சாரம், எரிவாயு, இதர பொருள்
களின் விலைகள் குறைந்ததுடன் பல உயர் சேவைப் பிரிவுகளில் பணவீக்கம் மேம்பட்டது.
தங்குமிடம், தனியார் சாலைப் போக்குவரத்துச் செலவுகள் போன்றவை தவிர்த்த மூலாதார பணவீக்கம், மார்ச் மாதத்தில் கடந்த ஆண்டு அதே காலகட்டத்தைவிட 0.5% அதிகரித்தது. பிப்ரவரி மாதத்தில் அந்த அளவு 0.2 விழுக்காடாக இருந்தது. ஒட்டுமொத்த பணவீக்கமும் மார்ச் மாதம் 1.3 விழுக்காடாக அதிகரித்தது. பிப்ரவரி மாதத்தில் அது 0.7 விழுக்காடாக இருந்தது.
ஊழியர் சந்தை நிலைகள் மேம்பட்டு வருவதாலும் தனியார் பயனீடு அதிகரிப்பதாலும் உள்நாட்டு விலை அழுத்தங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கும் என சிங்கப்பூர் நாணய ஆணையம், வர்த்தக, தொழில் அமைச்சு ஆகியவை நேற்று வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது. வரும் மாதங்களில் மூலாதார பணவீக்கம் அதிகரிக்கக்கூடும் என்று கூறப்பட்டாலும் வர்த்தகச் செலவுகள் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதால் இவ்வாண்டின் பிற்பாதியில் பணவீக்கம் வெகுவாக அதிகரிக்க வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஊதிய வளர்ச்சிக்கு வாய்ப்பில்லை என்றும் வர்த்தக வாடகை கள் குறைவாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தேவைகள் காரணமாக தனியார் போக்கு
வரத்து, தங்குமிட செலவுகள் தொடர்ந்து அதிகமாக இருக்கக்கூடும் என்று அறிக்கை தெரிவித்தது. சராசரி மூலாதார பணவீக்கம் 0 - 1% வரையும் சராசரி ஒட்டுமொத்த பணவீக்கம் 0.5% - 1.5% வரையும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

