ஒரே ஹவ்காங் கூட்டுரிமை வீடு: நான்கு தீச்சம்பவங்கள்
ஹவ்காங் வட்டாரத்தில் உள்ள 'ரிவர்சேல்ஸ்' கூட்டுரிமைத் திட்ட வீடுகளில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நான்கு தீச்சம்பவங்கள் நேர்ந்தன. வீடுகளில் உள்ளமைக்கப்பட்ட 'இலெக்ட்ரோலக்ஸ்' குளிர்சாதனப் பெட்டிகளுக்கும் தீச்சம்பவங்களுக்கும் தொடர்பு உண்டு என்று தெரிவித்த 'எண்டர்பிரைஸ் சிங்கப்பூர்', முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மற்ற குடியிருப்பாளர்களின் வீடுகளில் பொருத்தப்பட்ட குளிர்சாதனப் பெட்டிகளை அகற்றவுள்ளதாக தெரிவித்துள்ளது.
'ரிட்அவுட் டீ கார்டன்' மெக்டோனல்ட்ஸ் 32 ஆண்டுகள் கழித்து மூடுகிறது
'ரிட்அவுட் டீ கார்ட'னில் அமைந்துள்ள மெக்டோனல்ட்ஸ் கிளை 32 ஆண்டுகளுக்குப் பிறகு இவ்வாண்டு டிசம்பர் மாதம் நிரந்தரமாக மூடவுள்ளது. ஒரு குளத்திற்கு மேல் அமைக்கப்பட்ட கூடாரத்தில் 1981ஆம் ஆண்டிலிருந்து கேஎஃப்சி' உணவகத்தின் கிளை செயல்பட்டு வந்தது. அதையடுத்து 1989ஆம் ஆண்டு முதல் மெக்டானல்ஸ் அதன் கிளையை அங்கு திறந்தது.
கைபேசியை எடுக்க ரயிலை நிறுத்தியதாக ஒப்புக்கொண்டார்
எம்ஆர்டி ரயில் தண்டவாளத்தில் விழுந்த தன் கைபேசியை எடுப்பதற்காக, எஸ்எம்ஆர்டி பணியாளர் எச்சரித்தும் அவசரநிலை பொத்தானை அழுத்தினார் கிளமெண்ட் ஜோஷ்வா டான் டெக் கிம், 48. எம்ஆர்டி நிலையத்திலிருந்து தப்பிக்க அவர் முயற்சி செய்தபோது பாதுகாவல் அதிகாரி ஒருவர் அவரைத் தடுக்க முயன்றார். அதிகாரியை டான் குத்தினார். பாதுகாவல் அதிகாரியைத் தாக்கியது, எஸ்எம்ஆர்டி பணியாளரைத் தள்ளியது, பொது இடத்தில் தொல்லை கொடுத்தது ஆகிய குற்றங்களை டான் நேற்று ஒப்புக்கொண்டார். டானின் செயலால் போன விஸ்தா எம்ஆர்டி நிலையத்தில் ரயில் இரண்டு நிமிடங்களுக்கு நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மே 21ஆம் தேதியன்று டான் மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலையாவார்.

