மாது ஒருவர் இன்னொருவர் துணையுடன் சொத்து மனை உரிமையாளர்கள் என்று கூறி ஏமாற்றி, $1 மில்லியனுக்கு மேலான தொகையைக் கடனாகப் பெற்ற மோசடிக் குற்றத்திற்காக நேற்று நான்கு ஆண்டுகள் மூன்று மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
குற்றம் புரிந்த காலகட்டத்தில் 48 வயது ஃபூ வெய் லீ என்ற அந்த மாது, ஒரு கணக்காளராக இருந்ததாகவும் மற்றும் ஒரு மோசடிக் குற்றத்தில் பங்குபெற்றிருந்ததாகவும் கூறப்பட்டது.
அந்த மோசடிச் சம்பவத்தில் நிதி நிறுவனங்களிடமிருந்து $230,000க்கும் மேலான தொகையை ஃபூ ஏமாற்றிப் பெற்றுக்கொண்டார்.
ஃபூவின் காதலராக இருந்த 25 வயது கோர் சூன் கியட், கோரின் தாயார் 54 வயது சிம் சியொக் குவான், கோரின் நண்பன் யோ ஹுவா பியாவ் ஆகியோர் ஃபூ புரிந்த குற்றங்களுக்குத் துணையாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
அவர்கள் மீதான வழக்குகள் இன்னும் நிலுவையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
கோர், சிம் இருவரும் சிறிய நடுத்தர நிறுவனங்களுக்குக் கடன் வழங்கும் நிதி நிறுவனங்களுக்குப் பொய் விண்ணப்பங்கள் சமர்ப்பித்துப் பணம் பெறும் திட்டத்தில், கடன் செயல்முறைகளை நன்கறிந்த ஃபூவையும் சேர்த்துக்கொண்டனர்.
யோவையும் ஒரு நிறுவனத்தின் இயக்குநர் என்று கூறித் தங்களது மோசடிக் கும்பலில் சேர்த்துக்கொண்டனர்.
யோவின் போலி நிறுவனத்தில் வர்த்தக நடவடிக்கைகள் நடப்பதாக நம்ப வைத்து இரண்டு நிதி நிறுவனங்களிடமிருந்து முதல் மோசடித் தொகையைப் பெற்றனர்.
ஆனால், சொத்து மனை உரிமையாளர்களாக ஃபூவும் யோவும் தங்களைக் கூறிக்கொண்டு மூன்றாவது நிறுவனத்தை $1.1 மி. கடனுக்காக அணுகியபோது அனைவரும் சிக்கியதாகக் கூறப்படுகிறது.

