'மகன் உடலோடு போவேன் என கனவிலும் நினைக்கவில்லை'

'மகன் உடலோடு போவேன் என கனவிலும் நினைக்கவில்லை'

2 mins read
7b66cb8f-2ef1-420f-8868-f4a544144e95
தாயார் திருவாட்டி சுகுணன் சாந்தி, தன் மகன் சுதீஷ்மனுடன்.படம்: சுகுணன் சாந்தி -

இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த திருவாட்டி சுகுணன் சாந்தி, 50, என்ற மாது கணவனை இழந்தவர். 14 மற்றும் 11 வயதில் இருந்த தன் இரு மகன்களையும் உறவினர் பாதுகாப்பில் விட்டுவிட்டு 13 ஆண்டுகளுக்கு முன் அவர் வேலை தேடி சிங்கப்பூருக்கு வந்தார். பணிப்பெண்ணாக வேலையில் சேர்ந்தார்.

இதனிடையே, திருவாட்டி சுகுணன் சாந்தியின் மூத்த மகனான திரு சுகுணன் சுதீஷ்மன் வளர்ந்து ஆளாகி திருமணம் செய்துகொண்டார். திரு சுதீஷ்மனின் மனைவியும் 18 மாதப் பிள்ளையும் இந்தியாவில் இருக்கிறார்கள்.

இந்நிலையில், சுதீஷ்மன் தனது குடும்ப நகைகளை அடகுவைத்து பணம் பெற்று இரண்டரை ஆண்டுகளுக்கு முன் சிங்கப்பூரில் கட்டுமானத் துறை ஊழியராக வேலைக்கு வந்தார். அந்தக் கடன் இன்னமும் அடைந்தபாடில்லை.

பணம் சம்பாதித்து இந்தியாவில் சொந்தமாக வீடு கட்டி குடியேறிவிட வேண்டும் என்பது திரு சுதீஷ்மனின் இலக்கு.

சிங்கப்பூரில் தாயும் மகனும் தொலைபேசியில் பேசிக்கொள்வார்கள். தன் மகனை கொவிட்-19 தொற்றிவிடக் கூடும் என்ற அச்சம் அன்றாடம் தாயாரை ஆட்டிப்படைக்கும். ஒவ்வொரு நாளும் தொடர்புகொண்டு தன் மகன் பத்திரமாக இருப்பதை தாயார் உறுதிப்படுத்திக் கொள்வார்.

தாயும் மகனும் கடைசியாக சில வாரங்களுக்கு முன் சந்தித்தனர்.

வழக்கமாக கடந்த திங்கட்கிழமை இரவும் திரு சுதீஷ்மன் தன் தாயா ருடன் பேசினார். வேலை முடிந்து துவாசில் இருக்கும் விடுதிக்கு பத்திரமாகத் தான் திரும்பியதாக தாயாரிடம் அன்று அவர் கூறினார்.

அதுவே தாயும் மகனும் பேசிய கடைசி பேச்சாகிவிட்டது.

கொவிட்-19 தொற்றில் இருந்து தப்பி வந்த திரு சுதீஷ்மன், 28, கடைசியில் சாலை விபத்தில் சிக்கி மரணமடைந்துவிட்டார். திரு சுதீஷ்மனும் இதர ஊழியர்களும் சென்ற ஒரு லாரி தீவு விரைவுச் சாலையில் வேறு ஒரு வாகனத்தில் மோதியது.

வியாழக்கிழமை இரவு திரு சுதீஷ்மன் மரணமடைந்தார்.

"என் மகனுக்கு கொவிட்-19 தொற்று ஏற்படக்கூடாது என்று நான் வேண்டாத நாளில்லை.

"ஆனால் கடைசியில் அவன் நிலைமை இப்படி ஆகிவிட்டது. என் மகனின் உடலுடன் இந்தியா திரும்புவேன் என்று ஒருபோதும் நான் நினைத்ததில்லை. என் மகனுக்குப் பல கனவுகள் உண்டு.

"எல்லாமே தகர்ந்துவிடும் என்று நான் கனவிலும் நினைத்ததில்லை," என்று அந்த மாது கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

திருவாட்டி சுகுணன் சாந்தி நேற்று இந்தியா திரும்ப இருந்தார்.

தன் மகனை பலிகொண்ட சாலை விபத்தை அடுத்து, ஊழியர்கள் பாதுகாப்பாக வேலையிடங்களுக்குச் சென்று வருகிறார்கள் என்பதை உறுதிப்படுத்த மேலும் பலவற்றைச் செய்ய முடியும் என்று அந்த மாது நம்புகிறார்.