சிங்கப்பூரர்களைத் தங்களது கலாசாரத்துடனும் வரலாற்றுடனும் வேர்களுடனும் இணைக்கும் ஒரு முக்கிய அடையாளமாகத் தாய்மொழி விளங்குகிறது என்று போக்குவரத்து அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார்.
நமது பன்முகக் கலாசாரத்தின் ஓர் அம்சம் நமது மொழிக் கொள்கை எனக் குறிப்பிட்ட திரு ஓங், ஆங்கிலம் பணியிட, பயன்பாட்டு மொழியாகத் திகழ்ந்தாலும் தனித்துவமான நமது தாய்மொழியைப் பேணிக் காக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.
“தாய்மொழி என்பது வெறும் மொழி மட்டும் அல்ல, அது ஒரு அன்றாட வாழ்க்கைவழி. சமயங்களையும் சடங்குகளையும் கடைப்பிடிப்பதில் தாய்மொழி ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. சமூகத்தின் பரிணாம வளர்ச்சியையும் அது எடுத்துக்காட்டுகிறது,” என்றார் அவர்.
சிங்கப்பூரின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான திருமதி கமலாதேவி அரவிந்தனின் ‘செம்பவாங்’ எனும் தமிழ், ஆங்கில நூல் வெளியீடு இன்று மாலை தி ஆர்ட்ஸ் ஹவுஸில் இடம்பெற்றது. அமைச்சர் ஓங்கும் சிங்கப்பூருக்கான இந்தியத் தூதர் பி.குமரனும் இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
கடந்த 40 ஆண்டுகளாக தமிழிலும் மலையாளத்திலும் பல சிறுகதைகளையும் நாடகங்களையும் எழுதியிருக்கும் திருமதி கமலாதேவியின் முதல் நாவலான ‘செம்பவாங்’கை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் அவருடைய மகள் டாக்டர் அனிதாதேவி பிள்ளை. மலேசியாவிலிருந்து திருமணமாகி சிங்கப்பூரின் செம்பவாங்கிற்குக் குடிபெயர்ந்து, அங்கு தாம் சந்தித்த மனிதர்கள், கண்ட காட்சிகள், எதிர்கொண்ட அனுபவங்களைக் கொண்டு வரலாறு கலந்த கற்பனைக் கதையாக வடித்துள்ளார் திருமதி கமலாதேவி.