ஆஸ்திரேலியாவில் உள்ள த ஸ்டார் கோல்ட்கோஸ்ட் சூதாட்டக் கூடத்தில் சூதாடி ஆஸ்திரேலிய டாலர் 43 மில்லியன் கடன்பட்டதாகக் கூறப்படும் சிங்கப்பூரரான டாக்டர் வோங் யிவ் சோய்க்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் வழக்கில் முன்னிலையாக உத்தரவிட்டுள்ளது. முன்னதாக சிங்கப்பூர் சட்டப்படி அவர் அந்தக் கடனை ஈடுகட்ட வேண்டியதில்லை என்று சிங்கப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
இந்த வழக்குப் பற்றி கூறிய குவின்ஸ்லாந்து உச்ச நீதிமன்ற நீதிபதி தாமஸ் பிராட்லி, "இந்த வழக்கை அவர் எதிர்கொள்வதால் அவருக்கு எந்தவிதமான நியாயமற்ற சுமையோ, பாரபட்சமோ, இழப்போ ஏற்படாது. அத்துடன் எந்தவிதமான கடுமையான தொந்தரவோ துன்புறுத்தலோ இருக்காது என்று நான் எண்ணுகிறேன்," என்றார்.
இந்த வழக்கு சிங்கப்பூர் நீதிமன்றத்தில் முடிவுற்ற நிலையில் இங்குள்ள வழக்கு தொடர்வதால் நீதி பரிபாலனத்துக்கு எவ்வித களங்கமும் ஏற்படாது என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்று நீதிபதி சென்றமாதம் தீர்ப்பில் கூறியிருந்தார்.

