மார்சிலிங்-இயூ டீ குழுத்தொகுதி யைச் சேர்ந்த 550 குறைந்த வருமான குடும்பங்களுக்கு சனி, ஞாயிறு இரு வாரமுடிவு நாட்களில் உணவுப் பொருட்கள் அடங்கிய கூடைகள் அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டன.
அவற்றில் அரிசி, எண்ணெய், ரொட்டிகள், சர்க்கரை முதலான பல பொருட்களும் இருந்தன. இந்த ஆண்டின் நோன்புப் பெருநாளையொட்டி அந்த அன்பளிப்புகள் வழங்கப்பட்டன.
சிங்கப்பூர் தேசிய கூட்டுறவு சம்மேளத்தின் ஆதரவுடன் சிங்கப்பூர் வாரிய ஊழியர்கள் கூட்டுறவு அமைப்பு மேற்கொண்டு வரும் சமூக உதவித்திட்டங்களின் ஒரு பகுதியாக அந்தக் குடும்பங் களுக்கு உதவி கிடைத்தது.
இந்தப் பண்டிகைக் காலத்தில் குடும்பச் செலவுகளுக்கு உதவும் வகையில் இந்தக் கூட்டுறவு அமைப்பு $10,000க்கும் மேற்பட்ட அன்பளிப்புக் கூடைகளை வழங்கி இருக்கிறது.
சிங்கப்பூர் வாரிய ஊழியர்கள் கூட்டுறவு அமைப்பின் நிர்வாகக் குழு, ஊழியர்கள் அடங்கிய ஏறத்தாழ 20 தொண்டூழியர்களுடன் இந்தக் குழுத்தொகுதி ஆலோசகர்களான கல்வி அமைச்சர் லாரன்ஸ் வோங், தற்காப்பு, மனிதவள மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது, வடமேற்கு மாவட்ட மேயர் அலெக்ஸ் யாம், நாடாளுமன்ற உறுப்பினர் திருவாட்டி ஹானி சோ ஆகியோரும் சேர்ந்து அந்தக் குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டினர்.
இந்த ஆண்டில் இந்தக் கூட்டுறவு அமைப்பு குறைந்த வருமான குடும்பங்களுக்கு இத்துடன் இரண்டாவது தடவையாக அத்தியாவசியப் பொருட்களை அன்பளிப்பாகக் கொடுத்து உதவி இருக்கிறது.
சீனப் பெருநாளையொட்டி ஜாலான் குக்கோவில் பெரும்பாலும் வாடகை வீடுகளில் வசிக்கும் 170 குடும்பங்களுக்கு உணவுப் பொருட்களையும் சிவப்பு அன்பளிப்பு உறையையும் இந்த அமைப்பு கடந்த பிப்ரவரியில் வழங்கியது.
இந்த ஊழியர்கள் கூட்டுறவு அமைப்பின் தலைவரான எஸ் குலாம் இது பற்றி தெரிவிக்கையில், இப்படி உதவுவது இந்த அமைப்பிற்கு வழக்கமான ஒன்று என்றார்.
உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவது ஒருபுறம் இருக்க, பல்வேறு வழிகளில் சமூகத்திற்கு தாங்கள் உதவி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

