சுந்தர் பிலவேந்தர்ராஜ்
தமிழ் இளையர்கள் அடுத்த பத்து ஆண்டுகளில் எதிர்நோக்கும் சவால்கள், தீர்வுக்கான வழிமுறைகள் போன்றவற்றை அலசியது சிங்கப்பூர் தமிழ் இளையர் மன்றம் அண்மையில் நடத்திய மெய்நிகர் ஆய்வரங்க மாநாடு.
இவ்வாண்டு தமிழ்மொழி விழாவின் அங்கமாக சென்ற 18ஆம் தேதி 'ஸூம்' இணையத் தொடர்புத் தளத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் 371 பேர் பங்கேற்றனர்.
'2020களில் சிங்கப்பூர் தமிழ் இளையர்கள் எதிர்நோக்கும் சவால்கள், வாய்ப்புகள், உத்திகள்' என்ற கருப்பொருளில் 16 அமர்வுகளில் ஆய்வரங்கு நடந்தது. ஒவ்வோர் அமர்விலும் மூன்றிலிருந்து நான்கு கட்டுரைகள் படைக்கப்பட்டன.
மொத்தம் 61 படைப்பாளர்கள் தங்கள் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர் என்றும், இவ்வாண்டு இறுதிக்குள் ஆய்வரங்க மாநாட்டு தொகுப்பு நூல் வெளியிடப்படும் என்றும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
கல்வி, வேலைவாய்ப்பு, வர்த்தக வாய்ப்புகள், வியாபார சூழல், சமயம், பொழுதுபோக்கு, பெண்கள் முன்னேற்றம், தமிழ்மொழி, இலக்கியம், மனநலம், வாழ்க்கை முறை முதலிய தலைப்புகளில் கட்டுரைகள் படைக்கப்பட்டன.
பெண்கள் நலம், சமத்துவம், கலை அழகியல் என மூன்று அங்கங்களாக 'சிங்கப்பூர்த் தமிழ் இளையரும் சமூகப் படிவங்களும்' என்ற தலைப்பில் கட்டுரையைப் படைத்தார் சுதர்சன் அம்பலவாணன்.
"பெண்கள் நலமானது இன்றைய பல இளையர்களின் சிந்தனைப்போக்கில் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது.
எடுத்துக்காட்டாக, ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் நடைபெறும் தீமிதி திருவிழாவில், 'படுகளம்' என்ற சடங்கு நடைபெறும். மகாபாரத கதையை சித்தரிக்கும் இந்தச் சடங்கு, ஓர் ஆண், பெண்ணிற்கு அவமானத்தை ஏற்படுத்தினால் அதற்கு தக்க தண்டனை அளிக்கப்படும் என்ற நெறியை பங்கேற்கும் இளையர்களுக்கு உணர்த்துகிறது என்றார் சுதர்சன்.
எவ்வாறு கடல் அலைகள் காற்றின் திசைக்கு ஏற்ப மாற்றம் பெற்று கரையைத் தொடுகின்றனவோ அது போலவே வாழ்வு என்ற கடலில் அலை போன்ற மாற்றத்தை ஏற்று வாழ நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினார் 'மாற்றத்தை ஏற்கும் மனப்பக்குவம்' எனும் தலைப்பில் கட்டுரை படைத்த அபிஷா முத்துக்குமார்.
கொவிட்-19 கிருமித்தொற்று சூழலில் மாணவர்கள் வீட்டிலிருந்து கல்வி கற்ற நிலையிலும் தேசிய அளவிலான 'ஏ' நிலை தேர்வுகளில் மாணவர்கள் கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத வகையில் சிறப்பான தேர்ச்சி பெற்றதற்கு முக்கியமான காரணம் பள்ளிகளும் பெற்றோர்களும் மாற்றங்களை ஏற்கும் மனப்பக்குவத்தை பிள்ளைகளிடையே ஊக்குவித்ததுதான் என்றார் அவர்.
இளம் தமிழ் ஆசிரியரான ஹஸ்வின்நாத், இனிவரும் காலங்களில் ஆசிரியர்கள் தங்களை மாற்றங்களுக்கு தயார்ப்படுத்தி பாடப் புத்தகங்களை தாண்டியும் தங்கள் கற்பித்தலைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற கருத்தினை முன்வைத்தார்.
தான் பயிற்றுவிக்கும் தொடக்கப் பள்ளியில், மாணவர்களுக்காக தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒரு இணையதளத்தை உருவாக்கி தான் கற்றுக்கொடுத்த பாடங்களின் காணொளிகளை அதில் பதிவேற்றியும், பாடத்தை சார்ந்த சில இணைய விளையாட்டுகளையும் மாணவர்களுடன் பகிர்ந்துகொள்கிறார்.
மாணவர்கள் தங்கள் திறன்பேசி மூலம், எந்நேரம் வேண்டுமானாலும் இதைப் பயன்படுத்தலாம்.
ஆசிரியர்கள் மாணவர்களை தன்முனைப்போடு தங்கள் கற்றலுக்கு தாங்களே பொறுப்பேற்றுக்கொள்ள வழிக்காட்ட வேண்டும்.
இக்காலகட்டத்தில் இணையதளத்தில் பல தமிழ் கற்றல் வளங்கள் நிறைந்துள்ளன.
அவற்றின் நம்பகத்தன்மையை சோதித்துப் பார்க்கும் ஆற்றலை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும் போன்ற கருத்துகளை முன்வைத்தார் ஹஸ்வின்நாத்.