புலனாகாச் சொத்துகள், அறிவுசார் சொத்துத் துறையில் சிங்கப்பூரின் நிலை வலுப்படும்
புலனாகாச் சொத்துகள் மற்றும் அறிவுசார் சொத்துக்கான உலக மையமாக சிங்கப்பூரின் நிலையை வலுப்படுத்த பெருந்திட்டம் ஒன்று வகுக்கப்பட்டுள்ளது.
புலனாகாச் சொத்துகள் மற்றும் அறிவுசார் சொத்துத் துறையில் வேலைகளை உருவாக்குவதும் திறன்களை வளர்ப்பதும் அதில் அடங்கும்.
'சிங்கப்பூர் ஐபி உத்தி 2020' எனும் இந்தப் பத்தாண்டு வரைவுத் திட்டம் குறித்த அறிவிப்பு நேற்று வெளியானது. சிங்கப்பூர் அறிவுசார் சொத்து அலுவலகம் உட்பட குறைந்தது பத்து அரசாங்க அமைப்புகளை உள்ளடக்கிய பணிக்குழு ஒன்றும் அமைக்கப்படும்.
பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா அப்பணிக்குழுவின் தலைவராகவும் சட்ட இரண்டாம் அமைச்சர் எட்வின் டோங் அதன் துணைத் தலைவராகவும் இருப்பர்.
அறிவுசார் சொத்துப் பரிவர்த்தனைகள், நடவடிக்கைகள் மூலம் சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சியை ஊக்குவிப்பதும் தொழில் நிறுவனங்கள் தங்களது புலனாகாச் சொத்துகளையும் அறிவுசார் சொத்துகளையும் காத்து, நிர்வகிக்க உகந்த சூழலை ஏற்படுத்தித் தருவதை உறுதிப்படுத்துவதும் பெருந்திட்டத்தின் இலக்கு.
புத்தாக்கத் திறனாளர்களுக்கும் நிறுவனங்களுக்கும் ஆதரவளிக்கும் விதமாக அடுத்த தலைமுறை அறிவுசார் சொத்து தாக்கல் முறையை உருவாக்குவது போன்ற திட்டங்கள் வாயிலாக அவ்விலக்கு எட்டப்படும். அடுத்த ஆண்டின் நடுப்பகுதிக்குள் அம்முறையை அறிமுகப்படுத்த இலக்கு வகுக்கப்பட்டுள்ளது.
வணிகமயமாக்குவதற்காக பொது நிதியுடன்கூடிய புலனாகாச் சொத்துகள் மற்றும் அறிவுசார் சொத்துகளைப் பெற மேம்பட்ட வசதியை வழங்குவது உட்பட புலனாகாச் சொத்துகள் மற்றும் அறிவுசார் சொத்துகளைப் பயன்படுத்தும் புத்தாக்கத் தொழில் நிறுவனங்களை வளர்க்கவும் ஈர்க்கவும் திட்டங்கள் வகுக்கப்படும்.
எடுத்துக்காட்டாக, நிபுணத்துவ புலனாகாச் சொத்துகள் மற்றும் அறிவுசார் சொத்து சேவைகளைப் பெறும் வகையில் நிறுவனங்களுக்கான இணையச் சந்தையை வழங்கும் புதிய தளம் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது.
மதிப்பீட்டு வழிகாட்டி நெறிமுறைகளை வகுக்கும்விதமாக அனைத்துலக புலனாகாச் சொத்துகள் மற்றும் அறிவுசார் சொத்துக் குழுவை அமைக்கும் நடவடிக்கையை சிங்கப்பூர் முன்னெடுக்கும். அத்துறை சார்ந்த மதிப்பீட்டு நிபுணர்கள் தொகுதியையும் உருவாக்க திட்டமுள்ளது.
புத்தாக்கம் சார்ந்த பணிகளில் புலனாகாச் சொத்துகள் மற்றும் அறிவுசார் சொத்துத் தேர்ச்சிகளையும் திறன்களையும் வளர்க்கவும் அத்துறை சார்ந்த நிர்வாகத்திற்கான தேசிய திட்டநிலைகளை உருவாக்கவும் திட்டங்கள் இருக்கின்றன.
சிங்கப்பூர் புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கவும் புலனாகாச் சொத்துகள் மற்றும் அறிவுசார் சொத்து நிபுணத்துவ சேவைகளில் நல்ல வேலைகளை உருவாக்கவும் இந்தப் பெருந்திட்டம் உதவும் என்று அமைச்சர் இந்திராணி கூறினார்.
"புலனாகாச் சொத்துகள் மற்றும் அறிவுசார் சொத்து நிர்வாகத்திலும் உத்தியிலும் நிறுவனங்கள் திறன்களையும் தேர்ச்சிகளையும் மேம்படுத்த முடியும் என்பதோடு, கொவிட்-19 பரவலுக்குப் பிந்திய பொருளியல் சூழலில் சிறிய, நடுத்தர நிறுவனங்கள் வலுவாக மீண்டெழவும் இந்தப் பெருந்திட்டம் உதவும்," என்றார் அவர்.

