சிங்கப்பூரர்களில் மூவரில் இருவர் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வமாக இருப்பதும் ஐவரில் ஒருவர் இன்னும் போட்டுக்கொள்வதா வேண்டாமா என இன்னும் முடிவெடுக்காமல் இருப்பதும் கொள்கை ஆய்வுக் கழகம் மேற்கொண்ட ஆய்வு மூலம் தெரியவந்து இருக்கிறது.
அதேவேளையில், கிட்டத்தட்ட பாதிப் பேர் தடுப்பூசியின் பாதுகாப்பு, செயல்திறன், பக்கவிளைவுகள் குறித்து கவலைப்படுகின்றனர். குறிப்பாக, தடுப்பூசி பாதுகாப்பு குறித்து இளையர்கள் அதிகம் கவலைப்படுகின்றனர்.
கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து இவ்வாண்டு மார்ச் வரை 22 கட்டங்களாக, ஒவ்வொரு கட்டத்திலும் 21 வயதைத் தாண்டிய 500 பேருக்கு மேற்பட்டோரிடம் இணையம் வழியாகக் கருத்தாய்வு மேற்கொள்ளப்பட்டது.
சென்ற மார்ச் மாதம் நடத்தப்பட்ட இறுதிக் கருத்தாய்வில் பங்கேற்றோரில் 67 விழுக்காட்டினர் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வமாக இருப்பதாகவும் 13 விழுக்காட்டினர் தடுப்பூசி போட விருப்பமில்லை என்றும் தெரிவித்தனர்.
இதனிடையே, தங்களது வாழ்வாதாரங்கள் குறித்துப் பலரும் எச்சரிக்கையுடன் உள்ளபோதும் கொவிட்-19 பரவலைச் சமாளித்து வாழ நன்கு கற்றுக்கொண்டு இருப்பதாகவும் கொள்கை ஆய்வுக் கழகத்தின் ஆய்வறிக்கை கூறுகிறது.
அதேபோல, கடந்த ஓராண்டில் ஒட்டுமொத்த வேலைச் சந்தை குறித்த நம்பிக்கையும் குறிப்பிடத் தக்க அளவு அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.
கடந்த மே மாதம் இடம்பெற்ற கருத்தாய்வில் அடுத்த ஆறு மாதங்களில் வேலைச் சந்தை மோசமாக இருக்கும் என 80 விழுக்காட்டினர் தெரிவித்திருந்த நிலையில், 2021 மார்ச்சில் நடத்தப்பட்ட கருத்தாய்வில் 42 விழுக்காட்டினர் மட்டுமே அவ்வாறு கூறினர்.

