வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக்கின் பொதுத் தாழ்வாரத்தில் 80 வயதுகளில் உள்ள ஒரு மூதாட்டி அட்டைப் பெட்டிகளைச் சேகரித்து வைத்திருக்கும் செயலால் அங்கு தீ மூளும் அபாயம் அதிகரித்திருக்கிறது என்று அவரது அண்டை வீட்டாரைக் கவலை கொள்ள வைத்திருக்கிறது.
ஜூரோங் ஈஸ்ட் ஸ்திரீட் 24ல் உள்ள புளோக் 252ல் வசிக்கும் திருவாட்டி செல்லம்மா எனும் அந்த முதியவர் கடந்த சுமார் பத்து
ஆண்டுகளாக இச்செயலைப் புரிந்து வருகிறார்.
அவர் வசிக்கும் இடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து அட்டைப் பெட்டிகளைச் சேகரித்து அவற்றை விற்று, அதிலிருந்து கிடைக்கும் பணத்தை தனது கைச்செலவுக்காக வைத்துக்கொள்கிறார்.
"நான் செய்வதற்கு என்ன வேலை உள்ளது? நான் வீட்டிலேயே இருந்தால் எனது செலவுக்கான பணத்தை யார் கொடுப்பார்கள்?" என்று திருவாட்டி செல்லம்மா, தமிழில் த நியூ பேப்பர் செய்தித் தாளிடம் கூறினார்.
அவ்வாறு அவர் சேகரிக்கும் அட்டைப் பெட்டிகளை அவர் தனது வீட்டின் பொதுத் தாழ்வாரத்திலும் படிக்கட்டுகளிலும் அடுக்கி வைக்கிறார்.
இது குறித்து கருத்துரைத்த, வேறோர் இடத்தில் வசிக்கும் அந்த முதியவரின் உறவினர் ஒருவர், "அட்டைப் பெட்டிகளை வீட்டுக்கு வெளியே அடுக்கி வைத்திருப்பது ஒரு பிரச்சினையாகி இருக்காது. முன்பு அந்தப் பெட்டிகளை ஒரு 'காராங்கோனி'யிடம் (பழைய பொருட்களை வாங்கி, சிறிது பணம் கொடுப்பவர்) அடிக்கடி விற்று விடுவார். அதற்கான பணமும் அவருக்குக் கிடைத்து வந்தது. ஆனால், இவ்வாண்டு சீனப் புத்தாண்டுக்குப் பிறகு அந்த 'காராங்கோனி' நபர் வருவதில்லை," என்றார்.
முதியவரின் அட்டை வீட்டாரில் ஒருவரான 49 வயது திரு ரம்லி, "இந்தப் அட்டைப் பெட்டிகளில் எளிதில் தீப்பிடிக்க வாய்ப்புள்ளது. யாராவது ஒருவர் எரியும் சிகரெட் துண்டை அதன் மீது வீசினால் போதும். அது பெரும் தீச்சம்பவத்தை ஏற்படுத்திவிடும்," என்று கவலைப்பட்டார்.
லியன்ஹ சாவ்பாவ் சீன மொழி நாளிதழிடம் பேசிய சில சீன குடியிருப்பாளர்கள் அங்கு சில அட்டைப் பெட்டிகளில் தீப்பிடித்தது என்றும் ஆனால், அது உடனடியாக அணைக்கப்பட்டு விட்டது என்றும் தெரிவித்தனர். லியன்ஹ சாவ்பாவ் செய்தியின் தொடர்பில் பதிலளித்த நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ, "குடியிருப்பாளர்களின் கவலையை நான் புரிந்துகொள்கிறேன். அந்த முதியவரிடம் பரிவும் சகிப்புத்தன்மையும் காட்டுங்கள்.
"ஜூரோங்-கிளமெண்டி நகர மன்றம் திருவாட்டி செல்லம்மாவுக்கு பத்து ஆண்டுகளுக்கு மேலாக அரசாங்க உதவித் திட்டங்கள், நிதி மற்றும் உணவு வழங்கீடுகள் மூலம் உதவி வழங்கி வருகிறது.
"அட்டைப் பெட்டி விவகாரம் குறித்து ஜூரோங்-கிளமெண்டி நகர மன்றம் திருவாட்டி செல்லம்மாவுடன் இணைந்து நீண்டகாலத் தீர்வு காண முயன்று வருகிறது. அவரது நல்வாழ்வும் சமூகத்தின் பாதுகாப்பும் நிச்சயமாகக் கட்டிக்காக்கப்படும்," என்று கடந்த செவ்வாய்க்கிழமை தமது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தார்.
அமைச்சர் ஃபூ, யூஹுவா தனித்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமாவார்.
"பிழைப்புக்காகத்தான் திருவாட்டி செல்லம்மா அட்டைப் பெட்டி களைச் சேகரிக்க வேண்டும் என்பதில்லை. அவருக்கு குடும்ப உறுப்பினர்களும் சமூக அமைப்புகளும் நிதி ஆதரவு வழங்கி வருகின்றனர்.
"அட்டைப் பெட்டிகளைச் சேகரித்து அவற்றை வீட்டுக்கு வெளியே வைக்க வேண்டாம் என்று நாங்கள் பலமுறை அவரிடம் கூறியுள்ளோம். ஆனால் அவர் கேட்பதாக இல்லை. ஒன்றும் செய்யாமல் வீட்டில் இருக்க தன்னால் முடியாது என்று அவர் கூறுகிறார்," என்று திருவாட்டி செல்லம்மாவின் உறவினர் தெரிவித்தார்.
கழிவு சேகரிப்பு குத்தகையாளருடன் சேர்ந்து திருவாட்டி செல்லம்மா பணியாற்றலாம் என்ற அமைச்சர் ஃபூ கூறிய யோசனை அவ்வாறு செய்ய அந்த முதியவரை ஊக்கப்படுத்தலாம் என்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
அந்த முதியவருக்கு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை முதியோருக்கான ஆதரவுத் திட்டம் மூலம் உதவி கிடைத்து வருகிறது என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் பேச்சாளர் கூறினார்.

