'பிஎஸ்எல்இ' எனப்படும் தொடக்கப்பள்ளி இறுதித் தேர்வுக்கான புதிய மதிப்பீட்டு முறை இவ்வாண்டு முதல் நடப்புக்கு வருகிறது. இதன்படி, தொடக்கநிலை ஆறில் பயிலும் மாணவர்கள் உயர்நிலைப் பள்ளி செல்வதற்குத் தேவையான குறைந்தபட்ச புள்ளிகளைக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
புதிய பிஎஸ்எல்இ மதிப்பீட்டு முறைப்படி தலைசிறந்த உயர்நிலைப் பள்ளிகளுக்குச் செல்ல விரும்பும் தொடக்கநிலை ஆறு மாணவர்கள், இனி முழு மதிப்பெண்கள் பெறத் தேவையில்லை.
கல்வி அமைச்சு நேற்று 139 உயர்நிலைப் பள்ளிகளுக்கான குறைந்தபட்ச புள்ளிகளை வெளியிட்டது. 2016ஆம் ஆண்டு முதன்முதலில் அறிவிக்கப்பட்ட இப்புதிய மதிப்பீட்டு முறையின் கீழ், ஒவ்வொரு பிஎஸ்எல்இ பாடத்திற்கும் 'அடைவுநிலைகள்' எனப்படும் எட்டுத் தரநிலைகள் கொண்ட மதிப்பெண் தரம் அளவுமுறை அறிமுகம் காண்கிறது.
'A*' முதல் 'E' வழங்கப்படுவதற்குப் பதிலாக ஒவ்வொரு பாடத்திற்கும் 'AL1' முதல் 'AL8' வரையிலான அடைவுநிலைகள் வழங்கப்படும்.
நான்கு பாடங்களின் அடைவுநிலைகளின் மொத்தம், ஒரு மாணவரின் ஒட்டுமொத்த பிஎஸ்எல்இ மதிப்பெண்ணாகக் கருதப்படும். இதில் ஆகச் சிறந்த மதிப்பெண் நான்கு ஆகும்.
ராஃபிள்ஸ் கல்விக் கழகம், ராஃபிள்ஸ் பெண்கள் பள்ளி போன்ற பள்ளிகளின் குறைந்தபட்ச புள்ளிகள், 4 முதல் 6 எனக் கல்வி அமைச்சின் நேற்றைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. ஆண்டர்சன் உயர்நிலைப் பள்ளி, கிரெசெண்ட் பெண்கள் பள்ளி போன்ற பிரபலமான பள்ளிகளுக்கான குறைந்தபட்ச புள்ளிகளும் 4 முதல் 10, 6 முதல் 11 என்று முறையே இருந்தன.
'டி-ஸ்கோர்' என்ற பழைய பிஎஸ்எல்இ மதிப்பீட்டு முறையைக் காட்டிலும் இப்புதிய 'AL' முறை, மாணவர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் கொடுக்காத வண்ணம் அமைந்திடும் என்று கூறப்படுகிறது.
சென்ற ஆண்டு மாணவர்களது பிஎஸ்எல்இ முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு உயர்நிலைப் பள்ளிகளுக்கான குறைந்தபட்ச புள்ளிகளை நிர்ணயித்ததாக கல்வி அமைச்சு நேற்று இணையத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவித்தது.
இந்நிலையில் 'டி-ஸ்கோர்' முறை போலவே, ஆண்டுக்கு ஆண்டு மதிப்பெண் வரம்புகள் மாறும். ஏனெனில் முந்தைய ஆண்டின் பிஎஸ்எல்இ மாணவர்களது தேர்வு முடிவைக் கொண்டே அடுத்த ஆண்டின் மதிப்பெண் வரம்புகள் உறுதிசெய்யப்படும்.
ஒரே மதிப்பெண் பெற்றுள்ள இரண்டு மாணவர்கள், உயர்நிலைப் பள்ளியில் எஞ்சிய ஒரே இடத்தைப் பிடிக்க, ஒரு சில அம்சங்கள் கருத்தில் கொள்ளப்படும். மாணவரின் குடியுரிமை, மாணவரின் உயர்நிலைப் பள்ளி விருப்பத் தெரிவுப் பட்டியல் போன்றவற்றைக் கொண்டும் முடிவெடுக்க முடியாத நிலையில், மின்-குலுக்கல் முறை பயன்படுத்தப்படும் என்று கூறப்பட்டது.
ஆதலால், விருப்பமான ஆறு உயர்நிலைப்பள்ளிகளைக் கவனமாக தேர்வுசெய்யுமாறு அமைச்சு வலியுறுத்தியுள்ளது.