புதிய பிஎஸ்எல்இ மதிப்பீட்டு முறை, உயர்நிலைப் பள்ளிகளுக்கான குறைந்தபட்ச புள்ளிகள் ஆகியவை தொடர்பில் எழக்கூடிய சில கேள்விகள் குறித்து கல்வி அமைச்சு விளக்கம் அளித்து உள்ளது.
இதன்படி, சென்ற ஆண்டு பிஎஸ்எல்இ எழுதிய தொடக்கநிலை ஆறு மாணவர்களின் முடிவுகள், பள்ளித் தெரிவுகள் ஆகியவற்றைக் கொண்டு அந்தந்தப் பள்ளிகளுக்கான மதிப்பெண் வரம்புகள் நிர்ணயிக்கப்படும்.
மாணவர்கள் தொடர்ந்து கல்வித் தகுதி அடிப்படையில் உயர்நிலைப் பள்ளிக்குத் தகுதிபெறுவர். ஆனால் அதே பிஎஸ்எல்இ மதிப்பெண் பெறும் இருவர், ஓர் இடத்திற்குப் போட்டியிடுவதாக இருந்தால், சிங்கப்பூர் குடியுரிமை பெற்ற மாணவருக்கே முன்னுரிமை வழங்கப்படும்.
இருவருக்கும் ஒரே குடியுரிமைத் தகுதி இருந்தால், அவர்களின் உயர்நிலைப் பள்ளி தெரிவுகளின் வரிசைப்படி அக்குறிப்பிட்ட பள்ளி இடம்பெறும் இடமும் கருத்தில் கொள்ளப்படும்.
பட்டியலிலும் ஒரே இடத்தில் அப்பள்ளியின் பெயர் இருந்தால், மின்-குலுக்கல் முறை வழி மாணவர் பெயர் தேர்ந்தெடுக்கப்படும்.
இதற்கிடையே, குறைந்தபட்ச புள்ளிகளின் வரம்புக்குள் மாணவரின் மதிப்பெண் புள்ளிகள் இருந்தால், அவருக்கு நிச்சயம் பள்ளியில் இடமுண்டு என்று ஆகிவிடாது என்றும் அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.